1/17/2015




part -3


தங்களது உடலாலும், பொருளாலும் அறப்போர் புரிந்தோர் அவர்களுக்குப் பின் உள்ளவர்களைவிட சிறப்புக்குரியவர்கள் நம்பிக்கையாளர்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது, மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்று)க் கொண்டான். அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கி அவர்களுக்கு அண்மையிலான வெற்றியையும் அளித்தான். (அல்குர்ஆன் 48:18)
இன்னும், முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (நம்பிக்கை கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை நற்செயலில் பின்தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே, அவர்களை, அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அன்றியும், அவர்களுக்காக சொர்க்கங்களைச் சித்தப்படுத்தியிருக்கின்றனான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அதில் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள், இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9:100)
இந்த வசனங்களில் இஸ்லாத்திற்காக ஆரம்ப காலங்களில் தங்கள் உடலாலும் பொருளாலும் தியாகம் செய்தவர்கள் அவர்களுக்குப் பின்னால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை விட சிறப்புக்குரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இந்தச் சமுதாயத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் சிறந்தவர்கள், அபூபக்ர்(ரலி) அவர்கள் ஆவார். அபூபக்ர்(ரலி) அவர்களுக்குப்பின் சிறந்தவர் உமர்(ரலி) அவர்கள் ஆவார் என அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்னது அஹ்மது 792, 793, 794, 795, 796)
மதீனா வந்த பின்புதான், திண்ணைத் தோழர்கள் எனப் பெயர் வரலாயிற்று. பத்ருப் போரில் கலந்து கொண்டோரின் சிறப்புகளை நாம் அறிந்துள்ளோம். அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம்(ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத்(ரலி) ஆகியோரையும், நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடத்திற்குச் செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகப் பல்லக்கில் ஒரு பெண் இருக்கிறாள், அவளிடம் ஒரு கடிதம் இருக்கும், அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியனுப்பினார்கள்.
அவ்வாறே நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்து சென்றன. (அந்த இடத்தை அடைந்தோம்) அங்கு அந்தப் பெண் இருந்தாள். நாங்கள் அவளிடம் ”அந்தக் கடிதத்தை வெளியே எடு” என்று சொன்னோம். அவள் ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று சொன்னாள். நாங்கள், ”நீயாகக் கடிதத்தை எடுத்துக் கொடுத்து)விடு; இல்லாவிட்டால் (சோதனைக்காக) உன் ஆடையை நீ அவிழ்க்க வேண்டியதிருக்கும்” என்று கூறினோம்.
உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையிலிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அந்தக் கடிதத்தை அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தோம். அதில், ஹாத்திப் பின் அபீபல்த் தஆ(ரலி) அவர்கள், மக்காவாசிகளான இணைவைப்பாளர்களுள் சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் (போர்) விவகாரம் குறித்து சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்தார். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ”ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார்கள்.
ஹாத்திப்(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள், நான் குறைஷியரைச் சார்ந்து வாழ்பவனாகவே இருந்து வந்தேன். (அதாவது குறைஷியரின் நட்புக் குலத்தாராகவே அவர் இருந்துவந்தார். குறைஷிக் குலத்தில் ஒருவராக இருக்கவில்லை என சுஃப்யான் பின் உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்) தங்களுடன் இருந்துவந்த முஹாஜிர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தாரைப் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர் பலர் இருந்தனர்.
எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் எவரும் இல்லாததால் (இணைவைப்பாளர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து, அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள) என் (பலவீனமான) உறவினரைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால்தான் இணைவைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இத்தகவல்களைத் தெரிவித்தேன்) நான் என் மார்க்கமான இஸ்லாத்தை விட்டு வேறு மதத்தை ஏற்பதற்காகவோ, இறைமறுப்பாலோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இப்படிச் செய்யவில்லை” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ”இவர் சொல்வது உண்மையே! என்றார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். உமக்கென்ன தெரியும்? பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களை நோக்கி, நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களை மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறி விட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ் ”இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரைப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.” (60:1) எனும் வசனத்தை அருளினான். (நூல் : முஸ்லிம் 4907)
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டார். ”அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்” என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்; நீ தவறாகச் சொல்கிறாய் அவர் (நகரத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப் போரிலும் ஹுதைபியாவிலும் கலந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். (நூல் : முஸ்லிம் 4908)
பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களுள் திண்ணைத் தோழர்களும் உண்டு. அவர்கள் அல்லாதோரும் உண்டு. சொர்க்கத்துக்கு நற்செய்தி கூறப்பட்டோரும் உண்டு. அவர்கள் அல்லாதோரும் உண்டு.
திண்ணைத் தோழர்கள் பற்றிய தவறான அபிப்பிராயங்களுள் மற்றொன்று, அவர்கள் தான் ஸுஃபிய்யாக்களுக்கு முன்னோடிகள் என்பதாகும். ஸுஃபிய்யாக்களுக்கு முன்னோடிகள் என்ற கருத்தும் சமுதாயத்தில் மக்களிடையே நிலவுகிறது. திண்ணைத் தோழர்களுக்கும் ஸுஃபிய்யாக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே வரலாறு கூறும் உண்மை. ஸுஃபி என்பது ஸஃபா எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அதாவது உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளல் என்பது இதன் பொருளாகும். ஸுஃபிய்யாக்கள் இரண்டாம் நூற்றாண்டில் தான் தோன்றினர். திண்ணைத் தோழர்களோ நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே உள்ளனர். திண்ணைத் தோழர்களைக் குறிக்கும்.
ஸுஃப்ஃபா எனும் சொல்லுக்கும் ஸுஃபி எனும் சொல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஸுஃப்ஃபா என்பது திண்ணை என்று பொருள். இதை அதனோடு சம்பந்தப்படுத்தும் எல்லா கருத்துகளும் தவறானவையும் பலவீனமானவையும் ஆகும். ஸுஃபிகள் இறை நினவுக்காகத் தனித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு ‘கல்வத்’ என்றும் கூறுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகையில் தங்கியிருந்ததையும் திண்ணைத் தோழர்கள் தனித்திருந்ததையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகையில் தனித்திருந்தது அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தி (‘வஹி’) இறங்குவதற்கான முன்னேற்பாடாகும். திண்ணைத் தோழர்கள் திண்ணையில் குழுமியிருந்தது அவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்திலாகும். நபி(ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வஹி இறங்கிய பின்பு ஹிரா குகைக்குச் சென்றதில்லை. நபித்துவம் பெற்ற பின்பு நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகை அமைந்துள்ள ‘ஜபல் நூர்’ எனும் அந்த மலைப் பக்கமே சென்றதில்லை என வரலாறு கூறுகிறது. திண்ணைத் தோழர்கள் வசதி வாய்ப்பு பெற்றபின் அங்கிருந்து சென்று விட்டனர். திண்ணைத் தோழர்களுள் பிற்காலத்தில் ஆளுநர்களாக இருந்தவர்களும் உள்ளனர்.
நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற பின் மக்களோடு சேர்ந்து வாழ்ந்தனர். மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்தனர். மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள். இஸ்லாத்தைப் பரப்பவும் தற்காப்புப் போர்களை மேற்கொண்டனர். உலகின் பெரும் மன்னர்களுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு கடிதம் எழுதினார்கள். இவை அனைத்தும் ஸுஃபிய்யாக்களின் செயல்களுக்கு எதிரானதாகும். மக்களுடன் கலந்து நடவாமல் தனித்திருப்பதும், நல்லவற்றில் ஈடுபடுதல், திருமணம் போன்ற அனுமதிக்கப்பட்ட ஆசைகளை விட்டொழிப்பதும், இஸ்லாமிய நடை முறையன்று. ஆனால் ஸுஃபிகள் என்போர் இவற்றை கடைப்பிடிக்க வேண்டுமெனக் கூறுகின்றனர்.
அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு) ”முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ”(இனிமேல்) நான் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன்” என்றார். இன்னொருவர், ”நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ”நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, ”இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன். தொழுகவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மண முடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 5063, முஸ்லிம் 2714)

இது தான் நபி(ஸல்) அவர்கள் சுன்னத் வழிமுறையாகும். இதை விடுத்து ஸுஃபிகள் என்று கூறிக் கொண்டு துறவி போல் வாழ்தல் இஸ்லாத்திற்கு முரணானதாகும்.
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம். அவ்வாறே மர்யமின் குமாரர் ஈஸாவை (தூதராக அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம். அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம். ஆனால், அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவறத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டு பண்ணிக்கொண்டார்கள்) ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப்பேணவில்லை. அப்பால், அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலியை நாம் வழங்கினோம். எனினும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்5 7:27)
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டது போன்று எத்தனையோ துறவிகள் தமது துறவறத்தைச் சரியாகப் பேணாமல் திருமணமும் செய்யாமல், அந்நியப் பெண்களோடு சல்லாபித்து தமது துறவறத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளதை நாம் கேட்டும், படித்தும் இருக்கிறோம். துறவறம் மேற் கொள்வதாக நடித்து, அதைப் பேண முடியாமல் அவமானப்படுவதை விட துறவறம் பூணாமல் இருப்பதே சிறந்தது.
மனிதன் ஆசாபாசங்களுடன் தான் படைக்கப்பட்டுள்ளான். எனவே, அவனது ஆசைகளுக்கு அணை போடும் போது அது எல்லை மீறி பின்னர் வாய்ப்புக் கிடைக்கும் போது தவறு செய்யத் தூண்டிவிடுகிறது. அனுமதிக்கப்பட்ட உலக இன்பங்களில் மூழ்குவதுடன் அந்த இன்பங்களைக் கட்டுப்படுத்தி இறைவனை வணங்குவது தான் அதிக நற்கூலியைப் பெற்றுத்தரும் அறமாகும் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.
திண்ணைத் தோழர்கள் குறித்த மற்றொரு தவறான தகவல் நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்னரே திண்ணைத்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர் என்பதாகும். இதுவும் மாபெரும் தவறாகும். திண்ணைத் தோழர்கள் என்பது வரலாற்று ஆசிரியர்களாலும் ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படுதல் கிப்லா மாற்றம் ஏற்பட்ட பின்னரேயாகும். கிப்லா மாற்றம் நபி(ஸல்) அவர்களின் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்ற (ஹிஜ்ரத்துக்குப்) பின்பே ஏற்பட்டது. திண்ணைத் தோழர்கள் என்பது அதன் பின்பே வரலாற்று ஆசிரியர் களால் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறிருக்க அவர்கள் எப்படி நபி(ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றிருக்க முடியும்?
திண்ணைத் தோழர்கள் பற்றிய மற்றொரு தவறான தகவல் வருமாறு: நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் சென்றிருந்த போது அல்லாஹ் அவர்களுக்கு பல இரகசியங்களைக் கூறினான். அதை மனிதர்களில் யாரிடமும் கூறக் கூடாது என்றும் சொல்லி இருந்தான். இவ்வாறிருக்க நபி(ஸல்) அவர்கள் வானிலிருந்து பூமிக்கு வந்த பின், அல்லாஹ் நபி(ஸல்) அவர்களிடம் இரகசியமாகத் தெரிவித்திருந்தவற்றை திண்ணைத் தோழர்கள் தங்களுக்கிடையே பேசிக்கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நீ என்னிடம் கூறிய இரகசியத்தை நான் யாரிடமும் கூறவில்லையே. இவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டார்களாம். அதற்கு அல்லாஹ், அங்கே எனக்கும் உங்களுக்கும் இடையே அப்போது திண்ணைத் தோழர்கள் இருந்தார்கள்’ என்று கூறியதாக சிலர் தவறான தகவல் பரப்புகின்றனர். இது அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். இவ்வாறு நம்புபவர் நபி(ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் கூறிய குற்றத்திற்கு ஆளாகி நரகம் செல்வார்.
மிஃராஜ் நடந்தது மக்காவில், நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்வதற்கு முன்பு நடந்தது. திண்ணைத் தோழர்கள் என்ற பெயரே நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்பு தான் ஏற்பட்டது என்பதை மேலே குறிப் பிட்டுள்ளோம். இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் இந்த மேற்கண்ட தவறான தகவல்கள் குறித்து தமது ஃபதாவா இப்னு தைமிய்யா எனும் நூலில் விரிவாக எழுதியுள்ளார்கள்.
திண்ணைத் தோழர்கள் குறித்த மற்றொரு தவறான கண்ணோட்டம் வருமாறு: அவர்களுக்கு மக்களிடம் யாசிப்பது தவிர வேறு தொழில் ஏதும் கிடையாது என்று திண்ணைத் தோழர்கள் குறித்துக் கூறுகின்றனர் சிலர். ஆனால் இது தவறான செய்தியாகும். திருக்குர்ஆனையும் அவர்களுள் சிலரது வாழ்வையும், நபிமொழிகளையும் நன்கு புரிந்தோர் அவர்கள் குறித்து இவ்வாறு கூறமாட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: பூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு, அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக்கொள்கிறான். அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள். (இத்தகையோருக்காக) நல்லதிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான். (அல்குர்ஆன் 2:273)
இந்த வசனம், அல்லாஹ்வுக்காகவும், அவனது தூதருக்காகவும், தங்களது மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறிய முஹாஜிர் (மக்கா முஸ்லிம்)களைக் குறித்து அருளப்பட்டதாகும். இவர்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளைப் பெற்றிருக்கவில்லை. வாழ்வாதாரத் தேவைகளை ஈட்டுவதற்காகப் பயணம் மேற்கொள்ளவும் இயலாதவர்கள்.
அவர்கள் யாசிக்கும் தகுதி பெற்றிருந்தும் கூட தன்னடக்கத்தோடு நடந்து கொள்வார்கள். நடை, உடை, சொல், செயல்களால் செல்வந்தர்களைப் போன்று தன்னடக்கத்துடன் நடந்து கொள்வதால் அவர்களைக் காணுவோர் அவர்கள் பெரும் செல்வந்தர்கள் என எண்ணிவிடுவர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஒரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன், ஏழை யாரெனில் அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான், நீங்கள் விரும்பினால், ”அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்” எனும் (2:273வது) இறை வசனத்தை ஓதிக்கொள். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி 4539, முஸ்லிம் 1880.)
‘முஸைனா’ குடும்பத்தைச் சேர்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார்: என்தாய் என்னிடம், ”மக்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (உதவி) பெறுவது போன்று நீயும் அவர்களிடம் கேட்க வேண்டியது தானே” என்று கூறினார். அவ்வாறே நானும் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்கச் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (மக்களுக்கு) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அந்த சொற்பொழிவில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது: யார் (பிறரிடம் யாசிக்காமல்) தன்மானத்துடன் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானம் உள்ளவராகவே ஆக்குவான். யார் (பிறரிடம்) தேவையற்றவராக இருக்கிறாரோ அவரை அல்லாஹ் (பிறரிடம்) தேவையற்றவராகவே ஆக்குவான். ஐந்து ஊக்கியா அளவு உணவுப் பொருளைப் பெற்றவர் மக்களிடம் யாசித்தால் அவர் மக்களிடம் வற்புறுத்தி யாசித்தவர் போன்று ஆகி விடுகிறார்.
இதைக் கேட்ட நான் என் மனத்திற்குள், ஐந்து ஊக்கியா அளவை விட அதிக மதிப்புள்ள ஒட்டகம் ஒன்று நம்மிடம் உள்ளதே! நம் அடிமையிடமும் ஐந்து ஊக்கியா அளவு மதிப்பை விட அதிக மதிப்புள்ள ஒட்டகம் ஒன்று உள்ளதே! என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்காமலேயே திரும்பி விட்டேன். (நூல் : முஸ்னது அஹ்மத் 16601) (ஓர் ஊக்கியா என்பது இன்றைய 126.8 கிராம் மதிப்புள்ள வெள்ளியாகும். 5 ஊக்கியா 634 கிராம் வெள்ளி)

part 2


பசியின் கொடுமை காரணமாகவும், கடினமாக ஏழ்மை காரணமாகவும் அவர்கள் அனுபவித்த துன்பத்தையும் அதில் பொறுமையாக இருந்தது குறித்தும் அவர்களே அறிவிப்பதாவது:
அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள் (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.
பிறகு அபுல்காசிம் (நபி(ஸல்)) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். (என்னைப்) பின்தொடர்ந்து வா! என்று சொல்லி விட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் மனைவியாரிடம்) இந்தப் பால் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார்கள். அவர்கள் இன்ன ஆண் அல்லது பெண் தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுர்! என அழைத்தார்கள். நான் இதோ வந்துவிட்டேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள் என்றார்கள்.
திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. (இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணை வாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்து விட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஹிர் என! அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே! என்றேன். நபி(ஸல்) அவர்கள் இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள் என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு அபூ ஹிர்! என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன் கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே! என்று சொன்னேன். அதற்கவர்கள் நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே) என்று கேட்டார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான் என்றேன். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து (இதைப் பருகுங்கள் என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். இன்னும் பருகுங்கள் என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் பருகுங்கள் என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன். இறுதியில் சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை என்றேன். நபி(ஸல்) அவர்கள் (சரி) அதை எனக்குக் கொடுங்கள் என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள். (நூல் : புகாரி 6452)

அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். (அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), அபூ ஹுரைரா! என்று அழைத்தார்கள். நான், இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே கட்டளையிடுங்கள் என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனக்கேற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக் கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்! என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு மீண்டும் (அருந்துங்கள்) என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாகிவிட்டது.
பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். (என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத் துவிட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும் படி உங்களிடம் கேட்டேன் என்று சொன்னேன். உமர்(ரலி), அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும் என்று கூறினார்கள். (நூல் : புகாரி 5375)
அல்வலீத் பின் அப்தில் மலிக் என்பவர் காலம் வரை திண்ணைத் தோழர்கள் வசித்த அந்தத் திண்ணை அப்படியே இருந்தது. மதீனா பள்ளியை விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக இவர் அதை மாற்றியமைத்து விட்டார். அது தற்போது ‘தக்கத்துல் அக்வாத்’ என அழைக்கப்படுகிறது.
1) பிலால் பின் ரபாஹ்(ரலி) 2) அப் பராச பின் மாலிக்(ரலி) 3) ஸகீஃப் பின் உமர்(ரலி) 4) கயில் பின் சுராக்கா(ரலி) 5) ஹாரிஸா பின் நுஉமான்(ரலி) 6) ஹாஸிம் பின் ஹர்மலா(ரலி) 7) ஹன்ழலா பின் ஆமிர்(ரலி) 8) ஹகம் பின் உமைர்(ரலி) 9) கப்பான் பின் அரத்(ரலி) 10) குனைஸ் பின் ஹீதாஃபா(ரலி) 11) குரைம் பின் ஃபாதிக்(ரலி) 12) அபூ ரஸீன்(ரலி) 13) ஸாலிம் பின் உமைர்(ரலி) 14) இப்பாள் பின் ஸாரியா(ரலி) 15) துக்ஃபாபின் ஸாரியா(ரலி) 16) தல்ஹா பின் அம்ர்(ரலி) 17) தஃபாவி அத் தவ்ஸீ(ரலி) 18) அபூ தர் அல் கிஃபாரீ(ரலி) 19) அபூ ஹுரைரா(ரலி) 20) அப்துல்லாஹ் பின் உம்மி பக்தூம் 21) அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) 22) அப்துல்லாஹ் பின் ஸைத் அல் ஜீஹீனி(ரலி) 23) அப்துல்லாஹ் பின் அல் ஹாரிஸ்(ரலி) 24) அப்பாத் பின் காலித் அல் கிஃபாரீ(ரலி) 25) புளாலா பின் உஸைத் அல் அஸ்ஸாரீ(ரலி) 26) மிஸ்தஹ் பின் அஸாஸா(ரலி) 27) வாபிஸா பின் மஅத் அல் ஜீஹீனி(ரலி) 28) முகீஃராவின் முன்னாள் அடிமையான ஹிலால்(ரலி) இவர்கள் திண்ணைத் தோழர்கள் ஆவார்கள்.
திண்ணைத் தோழர்களுள் எழுபது நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுள் எவருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களுள் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது, (வேறு சிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத்தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும் போது) சிலரது போர்வை கரண்டைக்கால் வரையும் இருக்கும். வேறு சிலரது போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும், தமது மறைவிடங்களைப் பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காகத் தம் கைகளால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) நூல் : புகாரி 442
திண்ணைத் தோழர்கள் யார் யார் என்பதையும் அவர்கள் தொடர்பான செய்திகளும் பல நூல்களில் பல்வேறிடங்களில் பரவிக்கிடக்கின்றன. அந்த அறிவிப்புகள் அனைத்தையும் எழுதினால் அது பெரிய நூலாக ஆகிவிடும். எனவே, அவர்கள் குறித்த சில அவசியமான விஷயங்களை மட்டும் இங்கே கூற விரும்புகிறேன்.
பின்வரும் ஹதீஸ் முஸ்னது அஹ்மது எனும் நூலில் பதிவாகியுள்ளது. நபி(ஸல்) அவர்கள் திண்ணைத் தோழர்கள் மீது எவ்வளவு அக்கரை கொண்டிருந்தார்கள் என்பதை அது விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா(ரலி) அவர்களைத் திருமணம் செய்து கொடுத்த போது, அவர்களுக்குக் கம்பளிப் போர்வை, இலைகள் திணிக்கப்பட்ட தோல் தலையணை, இரண்டு திரிகைகள், தோலினாலான தண்ணீர்ப்பை, இரண்டு கூஜாக்கள் ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள்.
ஒரு நாள் அலீ(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! (பேரீத்தம் மரத்திற்குத்) தண்ணீர் இறைத்ததால், என் நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளது. அல்லாஹ் உன் தந்தைக்குப் போர்க்கைதிகள் சிலரைத் தந்துள்ளான். எனவே நீ சென்று அவர்களிடம் ஒரு உதவியாளரைக் கேள் என்றார்கள். உடனே ஃபாத்திமா(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் கைகள் காய்த்துப் போகும் அளவுக்கு நானும் மாவு திரிக்கிறேன்” என்று கூறினார்கள். எனவே ஃபாத்திமா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ”மகளே! நீ இங்கு வரக் காரணம் என்ன?” என்று (நபியவர்கள்) கேட்டார்கள். ”உங்களுக்கு ‘ஸலாம்’ கூற வந்தேன்” என்று ஃபாத்திமா(ரலி) அவர்கள் கூறினார்கள். (தாம் விரும்பியதை) அவர்களிடம் கேட்க, வெட்கப்பட்டுத் திரும்பிவிட்டார்கள்.
”என்ன செய்தாய்?” என அலீ(ரலி) அவர்கள் (ஃபாத்திமாவிடம்) கேட்டார்கள். ”அவர்களிடம் நான் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன்” என ஃபாத்திமா(ரலி) கூறினார்கள். (அலீயவர்கள் கூறுகின்றார்கள்: இருவரும்) சேர்ந்து அவர்களிடம் சென்றோம்.
அப்போது அலீ(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நெஞ்சு வலிக்கும் அளவுக்கு (பேரீத்த மரத்திற்குத்) தண்ணீர் இறைக்கின்றேன்” என்றார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்கள், ”என் கைகள் காய்த்துப் போகும் அளவுக்கு நான் மாவு அறைக்கின்றேன். உங்களிடம் போர்க் கைதிகளையும் வசதிகளையும் அல்லாஹ் தந்துள்ளான். எனவே எங்களுக்குப் பணியாள் (ஒருவரை) வழங்குங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் இருவருக்கும் நான் தரமாட்டேன். திண்ணைத் தோழர்களுக்குச் செலவு செய்ய எதுவும் கிடைக்காமல், நான் அவர்களை வயிற்றுப் பசியோடு (குப்புறப்படுக்க) விட்டுள்ளேன். எனவே, நான் கைதிகளை விற்று, அதன்மூலம் கிடைக்கும் தொகையைத் திண்ணைத் தோழர்களுக்கே செலவு செய்வேன்’ ‘என்று கூறினார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் திரும்பிவிட்டார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள், அவ்விருவரும் (உறங்குவதற்காக) தம் போர்வையைப் போர்த்திய நேரத்தில் வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போர்வையால் இருவரும் தங்களின் தலைகளை மூடினால், இருவரின் பாதங்களும் வெளிப்படும், பாதங்களை மூடினால், இருவரின் தலைகளும் திறந்து கொள்ளும் அப்போது, இருவரும் அப்படியே இருங்கள்” என்று கூறிவிட்டு, ”என்னிடம் நீங்கள் இருவரும் கேட்டு வந்ததைவிடச் சிறந்ததை உங்களுக்கு நான் கூறட்டுமா?” என்று கேட்டார்கள். ”சரி” என இருவரும் கூறினார்கள்.
ஆகவே, அவர்கள், ”சில சொற்கள் உள்ளன. அவற்றை எனக்கு ஜிப்ரீல்(அலை) கற்றுத் தந்தார்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பத்து தடவை ‘சுப்ஹானல்லாஹ்’ கூறுங்கள், பத்து தடவை ‘அல்ஹம்து லில்லாஹ்’ கூறுங்கள், பத்து தடவை ‘அல்லாஹு அக்பர்’ கூறுங்கள். உங்களின் படுக்கைக்கு நீங்கள் வந்து விட்டால், 33 தடவை ‘சுப்ஹானல்லாஹ்’ கூறுங்கள். 33 தடவை ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறுங்கள். 34 தடவை ‘அல்லாஹு அக்பர்’ கூறுங்கள்” என்று கூறினார்கள்.
”அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவற்றை எனக்குக் கற்றுத் தந்த நாளிலிருந்து அவற்றை நான் விட்டதே இல்லை” என்று அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் இப்னுல் கவ்வாஉ என்பவர், ”ஸிஃப்பீன் போரின் இரவு நேரத்தில் கூட விட்டதில்லையா?” என்று கேட்டார். ”இராக்வாசிகளே! அல்லாஹ் உங்களை நாசமாக்குவானாக! ஆமாம். ஸிஃப்பீன் போரின் இரவிலும் கூட நான் (அவற்றை ஓத) விட்டதில்லை” என அலீ(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : அதாஉ பின் ஸாஇப்(ரஹ்) நூல் : முஸ்னது அஹ்மது 562, 797
மக்களிடம் திண்ணைத் தோழர்கள் குறித்துள்ள தவறான சிந்தனைகளை களைவது முக்கியமாகும். அவர்கள் குறித்த தவறான எண்ணங்களுள் ஒன்று அவர்கள் நாற்பெரும் கலீஃபாக்களான அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ(ரலி) ஆகியோரை விட சிறப்புக்குரியவர்கள். நபி(ஸல்) அவர்களால் சொர்க்கவாசிகள் என நற்செய்தி கூறப்பட்ட (தல்ஹா, ஸுபைர், ஸஅது, அப்துர் ரஹ்மான் பின் அஉஃப், அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ், ஸயீத் பின் ஸைத்) ஆகிய பதின்மரை விடவும், ஏன்! மற்றெல்லா நபித்தோழர்களை விடவும் அவர்கள் சிறப்புக்குரியவர்கள் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
அல்லாஹ் கூறுகின்றான்: அன்றியும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர உரிமை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களிலிருந்து எவரும் சமமாக மாட்டார்கள். (மக்காவின் வெற்றிக் குப்)பின் செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும், அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கிறன்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் 57:10

திண்ணைத் தோழர்கள்! - 1


திண்ணைத் தோழர்கள் என்போர் நபி(ஸல்) அவர்களின் ஏழைத் தோழர்கள் ஆவர். இவர்களுக்கு குடும்பம், வீடு, செல்வம் ஏதும் இருக்கவில்லை. மஸ்ஜிதுன் நபவியை ஒட்டிய ஒரிடத்தில் இவர்கள் தங்கி வந்தனர். ஆதரவற்றவர்கள் தங்குவதற்காகவே இந்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தையே ஸுஃப்பா (திண்ணை) என்பர். இவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது கூடும்; குறையும். இவர்களில் திருமணம் செய்து கொண்டவர், இறந்து போனவர், பயணம் சென்றவர் ஆகியோரால் அவ்வப்போது இவர்களின் எண்ணிக்கை குறைவதுண்டு.
நூற்றுக்கும் அதிகமானோர் இவ்வாறு இருந்து வந்ததாக அபூநுஐம்(ரஹ்) அவர்கள் ஹுல்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவரான அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், திண்ணைத் தோழர்களை இஸ்லாத்தின் விருந்தாளிகள் என்று கூறுவார்கள். (காண்க புகாரி ஹதீஸ் எண்.6452) தொழுகைக்கு வருவோரிடம் சொல்லி இவர்களை உணவுக்காக அழைத்துச் செல்லும் படி நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். தாமும் அழைத்துச் செல்வார்கள்.

தர்மப்பொருள்கள் ஏதேனும் வந்தால், அதனை நபி(ஸல்) அவர்கள் சாப்பிடாமல், திண்ணைத் தோழர்களுக்கு அனுப்பி விடுவார்கள். அன்பளிப்பு ஏதேனும் வந்தால், அதைத் திண்ணைத் தோழர்களுடன் சேர்ந்து தாமும் சாப்பிடுவார்கள். (ஃபத்ஹுல் பாரீ)
இந்நாளில் இது ‘தக்கத்துல் அக்வாத்’ என அறியப்படுகிறது. மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த திருமணம் செய்யாத, வசதியற்ற, குடும்பமோ, வீடு வாசல்களோ இல்லாத ஏழைகள் இங்கே தங்கியிருந்தார்கள். இவர்களின் எண்ணிக்கை சிலவேளை அதிகரிக்கும், சிலவேளை குறையும். சில வரலாற்று நூற்களில் 70 முதல் 100, என்றும் 300 மேற்பட்டோர் என்று எழுதப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் தமது பெரும்பாலான நேரங்களில் இவர்களுடன் அமர்ந்திருப்பது வழக்கம். அவர்களோடு அளவளாவுவார்கள். உணவு வீட்டிலிருந்தால் இவர்களை அழைத்து உணவு வழங்குவார்கள். நபித்தோழர்கள் இவர்களுள் ஒரிருவரை தம்மோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவருந்தச் செய்வது உண்டு. பேரீச்சங் குலைகளைக் கொண்டு வந்து இவர்கள் வசிக்கும் திண்ணையில் இவர்களுக்காக சிலர் தொங்கவிடுவதும் உண்டு.
இதைக் கண்ட நயவஞ்சகர்கள் பெருமைக்காக, முகஸ்துதிக்காக தாழ்ந்த வகைப் பேரீச்சங் குலைகளைக் கொண்டு வந்து அதுபோன்று தொங்கவிடுவது உண்டு. இவர்கள் குறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான்
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் 2:268)
திண்ணைத் தோழர்களின் நிலை குறித்து இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 2:273)
இவர்களின் முக்கிய பணி நபி(ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் கற்றுக்கொள்வது, மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொள்வதே ஆகும். அல்லது நபி (ஸல்) அவர்கள் யாரிடம் கற்றுக் கொள்ளும்படி கூறுகிறார்களோ அவர்களிடம் கற்றுக் கொள்வதாகும். போர் வந்து விட்டால், இவர்களுள் சக்தி பெற்றவர்கள் போருக்காகப் புறப்படுவார்கள். இவர்களுள் முக்கியமானவர் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ஆவார்கள்.
இவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நபிமொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். அது குறித்து அவர்களே அறிவிக்கிறார்கள்:
அபூ ஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு ஏழை மனிதன். நான் என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து வந்தேன். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன் என்று அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, நாம் நேர்வழியையும் தெளிவான சான்றுகளையும் அருளி மக்களுக்காக அவற்றை வேதத்தில் நாம் தெளிவாகக் கூறிய பின்னரும் யார் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் தன் அருளுக்கு அருகதையற்றவர்களாக்கி விடுகிறான். மேலும் (தீயோரை) சபிப்ப (வர்களான இறைநம்பிக்கையாளர்களும் வான)வர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ஆயினும் அவர்களில் யார் (தம் குற்றங்களிலிருந்து) மீண்டு, மேலும் (தம்மைச்) சீர் திருத்தி இன்னும் (தாம் மறைத்தவற்றை மக்களுக்குத்) தெளிவுபடுத்தியும் விடுகின்றனரோ அவர்களைத் தவிர. (அவ்வாறு தம்மைத் திருத்திய) அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் மிக்க மன்னிப்பவனும் அருளுவதில் அள வற்றவனுமாவேன் (திருக்குர்ஆன் 02:159-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.
மேலும் தொடர்ந்து மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.
இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு உம்முடைய மேலங்கியை விரியும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக! என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (நூல்கள் : புகாரி 118, 119, முஸ்லிம் : 4905, 4906)

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...