5/08/2012

மார்க்கப்பணியை .......


1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர் களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்…” (9:71)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமு தாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக் கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3:110)
நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெற்றோர் ஆவர். (3:104)
இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.
மேலும், நபிமார்கள் அனைவரும் இம்மார்க்கப் பணியை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, நாளை மறுமையில் அந்த இறைவனிடம் மட்டுமே கூலி-சம்பளத்தை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும்; ஒருபோதும் மக்களிடம் கூலி-சம்பளத்தைக் கேட்கவும் கூடாது; எதிர்பார்க்கவும் கூடாது என்பதை அனைத்து நபிமார்களும் பகிரங்கமாகப் பிர கடனப்படுத்தியதை 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.
36:21 குர்ஆன் வசனம் கூலி வாங்காமல் மார்க்கப் பணி செய்கிறவர்களை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும்; அவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் என உறுதிப்படுத்துகிறது. கடமையான மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்கினால் அதனால் மக்கள் சுமையேற்றப்பட்டு வழிதவற அது காரணமாகிவிடும் என்பதை 52:40, 68:46 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.
அதனால்தான் இம்மதகுருமார்கள் சிறிதும் இறையச்சம் இல்லாமல், துணிந்து குர்ஆன் வசனங்களை 2:159,161,162 கூறுவது போல் திரித்து, வளைத்து தவறான விளக்கங்கள் கொடுப்பது, பொய்ச் சத்தியம் செய்வது, அல்லாஹ்மீதே ஆணையிட்டுப் பொய் உரைப்பது, துணிந்து மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவது, நேரடி குர்ஆன், ஹதீஸ் கருத்மதுக்களைக் கேட்கவிடாமல் மக்களைத் தடுப்பது இப்படிப்பட்ட நரகத்திற்கு இட்டுச் செல்லும் துர்ச் செயல்களைத் துணிந்து செய்ய முடிகிறது.
இந்த உண்மைகளை மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சுய சிந்தனையுடன், தன்னம்பிக்கையுடன் படித்து விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள்வார்கள். இந்த வசனங்கள் எல்லாம் முன்சென்ற காஃபிர்கள், யூதர்கள், கிறித்தவர்கள் பற்றி இறங்கியவை; முஸ்லிம்களான நம்மை இவை கட்டுப்படுத்தா எனக் கூறுவார்கள்.
அல்லாஹ் கண்டித்துக் கூறும் ஒரு தவறை ஆதத்தின் மக்களில் யார் செய்தாலும் தவறு தான்; தண்டனைக்குரிய குற்றம்தான். உதாரண மாக லூத்(அலை) அவர்களின் சமூகம் ஓரினப் புணர்வில் ஈடுபட்டதாக குர்ஆன் 7:80,81 வச னங்களில் அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். இந்தக் கடும் கண்டனம் அந்தச் சமூகத்திற்குரி யது. எங்களுக்கில்லை என்று கூறுகிறார்களா?
ஓர் அரசு அதிகாரி அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறார், இந்த நிலையில் தனது பணிக்காக மக்களிடம் கூலி வாங்குவது பகிரங்கமான லஞ்சம்-கையூட்டு என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? இல்லையே! அதேபோல் மார்க்கப் பணிக்கு இவர்களுக்கு அல்லாஹ்விடமே கூலி இருக்கிறது என்று அல்குர்ஆனும், ஹதீஸ்களும் தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் மார்க்கப் பணிக்காக மக்களிடம் கூலி-சம்பளம் வாங்குவது கையூட்டு -லஞ்சமே.
“”மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அன் றியும் நிச்சயமாக, அல்லாஹ் எதனைத் தூதர்களுக்குப் பணித்தானோ அதனையே நம்பிக்கையாளர்களுக்கும் பணித்துள்ளான்”. “”தூதர்களே! நீங்கள் தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்….” (23:51) என்று இறை வன் கட்டளையிடுகிறான். (அதேபோல்) “”நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்…” (2:172) என்றும் அவன் கட்டளையிட்டுள்ளான் என்று நபி(ஸல்) கூறியபின் ஒருவனைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
அவன் மண் புழுதிகளில் சிக்கி, நெடும் தொலைப் பயணத்துக்கு ஆளாகி, (ஹஜ்ஜுக் குச் சென்று) தலைவிரி கோலமான நிலையில் தன் இரு கைகளையும் விண்ணை நோக்கி உயர்த்தியவனாக, “”இறைவனே! இறைவனே!! என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக!” என்று கூறுவானானால் -அவன் உண்பதும், குடிப்பதும், உடுத்தியிருப்பதும் ஹராமாகவும் ஆக, அவன் ஹராமான பொருள்களைக் கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இறைஞ்சுவனானால், அவனுடைய இறைஞ்சலுக்கு எவ்வாறு விடை அளிக்கப்படும்?” (அதாவது அவனு டைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?) என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம் திர்மிதீ, அல்ஹதீஸ் 4321)
கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று இத்தனை குர் ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க ஹதீஸ்கள் இதுபற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள். “”குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ முற்படாதீர்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)
“”எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)
குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தெளிவாக நேரடியாக இப்படிக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் குர்ஆன் வசனத்தைத் திரித்து வளைத்து அதன் நேரடிக் கருத்தை எப்படி மறைக்கிறார்கள் தெரியுமா?
கடமையான மார்க்கப் பணிபுரிகிறவர்கள், சொந்தமாக உழைத்துப் பொருளீட்ட வாய்ப்பு இல்லாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு ஜகாத், சதக்கா நிதியிலிருந்து கூலி-சம்பளமாகக் கொடுக்கலாம் எனச் சுய விளக்கம் கொடுக்கிறார்கள்.
அல்குர்ஆனை வஹி மூலம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் மட்டுமே குர்ஆன் வசனங்களுக்கு 2:213, 16:44,64 வசனங்களின் படி விளக்கம் கொடுக்கக் கடமையும் உரிமையும் பெற்றவர்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்கும் சுய விளக்கம் கொடுக்கும் உரிமை இல்லை என்பதை 7:3, 33:36,66-68, 18:102-106, 59:7, 9:31 குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாக எச்சரிப்பதை ஒருபோதும் விளங்க மாட்டார்கள். அந்தளவு உள்ளங்கள் இருளடைந்து விட்டன.
2:273 வசனத்திற்கு இவர்கள் கூறுவதுதான் உண்மையான பொருள் என்றால், அதைக் கண்டிப்பாக நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டி இருப்பார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன், வேறு நோக்கமே இல்லாமல் மஸ்ஜிதுன் நபவிக்குப் பக்கத்திலிருந்த திண்ணையில் கிடந்த அஸ்ஹாபுஸ்ஸுஃப்பாக்களுக்கு அரசு கஜானாவிலிருந்து மாதாமாதம் கூலி-சம்பளம் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். குறைந்தபட்சம் முஹாஜிர்களை அன்சார்களிடம் சாட்டி விட்டது போல், இந்த அஸ் ஹாஃபுஸ்ஸுஃப்பாக்களையும், இதர வசதியுள்ள நபி தோழர்களிடம் சாட்டிவிட்டு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். ஏன் செய்யவில்லை? என்று இந்த மவ்லவிகள் என்றாவது சிந்தித்திருப்பார்களா?
அதுபோல் அன்று முழுநேர மார்க்கப் பணி புரிந்த நபிதோழர்களுக்கும் அப்படி ஏற்பாடு செய்து சமுதாயத்திற்கு வழிகாட்டி இருப்பார்கள்.
பல நாட்கள் பட்டினி கிடந்து மயங்கி விழும் நிலையிலும் அவர்களில் சிலர் இருந்துள்ளனர். ஆயினும் அவர்கள் யாரிடமும் 2:273 கூறுவது போல் தங்கள் நிலையை வெளிப்படுத்தியதில்லை. அவர்களது பரிதாப நிலையைப் பார்த்து நபிதோழர்கள் அவர்களாக முன்வந்து உபகாரம் செய்ததாகவே ஹதீஸ்கள் கூறுகின்றன. இதையே 2:273 இறைக் கட்டளை வலியுறுத்துகிறது.
கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்க குர்ஆனில் வேறு ஆதாரமே இல்லை. 2:273 இறைவாக்கும் சம்பளம் பேசி மாதா மாதம் குறிப்பிட்டத் தொகை வாங்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவான பின்னர் இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் சுய விளக்கம் என்ன தெரியுமா?
சில நபி தோழர்கள் ஒரு ஊர் வழியாக வரும்போது அவ்வூர் மக்களின் தலைவரைப் பாம்பு கடித்து வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிதோழர்களில் ஒருவர் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி விஷத்தை இறக்கினார். அதற்காக அத்தலைவர் 30 ஆடுகளைக் கொடுத்தார். ஆயினும் குர்ஆன் ஓதி காசு வாங்கக் கூடாது என்ற தடை இருப்பதின் காரணமாக ஐயப்பட்டு ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைக் கூறி, வாங்கிக் கொண்டு வந்த ஆடுகள் ஹலாலா? ஹராமா எனக் கேட்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பங்கு வைத்துக் கொள்ளும்படியும், தனக்கொரு பங்கு தரும்படியும் கூறியதாக அபூ ஸஈது(ரழி) அறிவித்து புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ ஆகிய நூல் களில் இருப்பதாக அல்ஹதீஸ் 4694ம் ஹதீஸில் பதிவாகி இருக்கிறது.
இச்சம்பவத்தைப் பெரிய ஆதாரமாகக் காட்டி மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்துகிறார்கள். கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது என்று அல்குர்ஆனில் நேரடித் தடை இல்லாதிருந்தால் அவர்களின் இவ்வாதம் சரிதான். ஆனால் தெளிவான தடை இருக்கிறதே! அதனால் தானே நபி தோழர்கள் நபியிடம் வந்து ஆடுகள் ஹலாலா, ஹராமா எனக் கேட்கிறார்கள்! அந்த நபிதோழர் ஃபாத்திஹா சூராவை ஓதினார். ஆனால் விஷம் இறங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். குர்ஆன் ஓதியதற்காக ஆடுகள் கிடைத்திருக்குமா? கிடைத்திருக்காதே!
அப்படியானால் வைத்திய அடிப்படையில் அவ்வாடுகள் கூலியாகக் கொடுக்கப்பட்டனவே அல்லாமல், குர்ஆன் ஓதியதற்காகக் கொடுக்கப்படவில்லை என்பது விளங்குகிறதே! இந்த ஹதீஸை கொண்டு குர்ஆன் ஓதி நோயைச் சுகப்படுத்தினால் அதற்காகக் கூலி வாங்க அனுமதி உண்டு என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது. பள்ளிகளில் தொழுதுவிட்டு வெளியே வரும்போது அங்கு காத்து நிற்கும் நோயாளிகளுக்கு குர்ஆனிலிருந்து சில வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்க்கலாம். இங்கும் நோய் சுகமான பின்னர் அதற்குரிய கூலியை பெறலாமே அல லாமல் குர்ஆன் ஓதியதற்காக கூலி வாங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல என்பதே குர்ஆன், ஹதீஸ் நேரடியாகக் கூறும் உண்மையாகும்
தொழ வைப்பதற்காக நாங்கள் நேரம் ஒதுக்கி வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்காகச் சம்பளம் வாங்குகிறோம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இதுவும் மிகத் தவறான வாதமே! எப்படி என்று பாருங்கள். பெரும்பாலான இமாம்கள் தொழுகை ஆரம்பிக்கும் இறுதிக் கட்டத்தில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முன்னதாகவே பல தொழுகையாளிகள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கிறார்கள். அது மட்டுமா? தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் (பாங்கு) முஅத்தின் தொழுகைக்கு அரை மணி நேரமோ, 20 நிமிடங்களோ முன் கூட்டியே வந்து பாங்கு சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார். நேரம் ஒதுக்கி முன்னரே வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே அதற்காகச் சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்றே ஹதீஸ் கூறுகிறது. அது வருமாறு: “”முஅத்தினை நியமனம் செய்தால் எந்த விதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இறுதியான உறுதி மொழி வாங்கினார் கள்” என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) கூறினர். (அபூதாவூது, திர்மிதீ)
கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்துப் பாருங்கள்! தொழுகைக்கு 30 நிமிடமோ, 20 நிமிடமோ முன்கூட்டியே நேரம் ஒதுக்கி வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று ஹதீஸ் தெளிவாக நேரடியாகக் கூறும் நிலையில், தொழுகைக்குக் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வந்து, தொழுகை விரிப்பைக் கூட முஅத்தினே ஒழுங்குபடுத்தி வைத்த நிலையில், வரிசைகளை நேர்படுத்தி ஒழுங்குபடுத்தாமலும், முன் வரிசைப் பூர்த்தியாகி இரண்டாம் வரிசையில் நிற்கிறார்களா? என்று பார்க்காமலும் ருகூவுக்குப் பின்னுள்ள சிறு நிலையிலும், இரண்டு சுஜூதுக்கு இடைப்பட்ட நிலையிலும் போதிய அவகாசம் கொடுக்காமலும் அவசர அவசரமாகத் தொழுது, தொழுகை முடிந்ததோ இல்லையோ தலைப் பாகையை அவிழ்த்து எறிந்துவிட்டு வெளியே பறந்து செல்லும் இமாமுக்கு, தொழுகைக்காக நேரம் ஒதுக்கி வருகிறார் என்பதற்காகச் சம்பளம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்குமா? இப்படி எல்லாம் சுய புராணங்களை அவிழ்த்து விட்டு அறிவு குறைந்த சுய சிந்தனையற்ற ஆட்டு மந்தைபோல் மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும் மக்களை ஏமாற்ற முடியுமே அல்லாமல் அல்லாஹ் வை ஏமாற்ற முடியுமா? ஒருபோதும் முடியாது.
மக்கள் இமாமுக்கு முன்னாலேயே வந்து சுன்னத்து தொழுது, காத்துக் கிடந்து கடமையான தொழுகையைத் தொழுத பின்னர் உபரியான தொழுகைகளையும் ஆர அமர தொழுது விட்டு, அதாவது இமாமுக்கு முன்னர் வந்து, இமாமுக்குப் பின்னர் செல்லும் அந்த மக்கள் மண்ணையா சாப்பிடுகிறார்கள்? அவர்கள் உழைத்துப் பொருளீட்டி அவர்களும், அவர்கள் குடும்பத்தார், உறவினர் முதல் சாப்பிட்டு, இந்த உழைப்பதில் சோம்பேறித்தனம் காட்டும் இமாம்களுக்கும் கொடுக்கவில்லையா?
இந்த நிலையில் இகாமத் சொல்லும் நேரம் நெருங்கும்போது அவசர அவசரமாக வந்து தலைப்பாகைக் கட்டிக்கொண்டு தொழவைத்து விட்டு அவசர அவசரமாக வெளியேறும் இந்த இமாம்களுக்குத் தங்கள் கைகளால் ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடுவதற்கு என்ன கேடு?
இமாம்களின் நிலை இதுவென்றால், அடுத்து கடமையான பிரசார பணி செய்கிறவர்களும் கூலிக்கே மாரடிக்கிறார்கள். இமாம்களைப் போல் ஒரு நாளில் அதிகபட்சம் சுமார் 5 மணிநேரம் செலவிடும் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாம். அதனால் அவர்களுக்கு ஹலாலான முறையில் பொருளீட்ட நேரம் இல்லையாம்! அதனால் பிரசார பணிக்குச் சம்பளம் வாங்குகிறார்களாம்.
மார்க்கப் பணிக்குக் கூலி வாங்கி நாங்கள் குபேரர்கள் ஆகிவிட்டோமா? அன்றாடம் நாட்களை ஓட்டுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. வறுமையில் வாடுகிறோம் என்று மவ்லவிகள் கூறுகிறார்கள். “”மக்களிடம் கையேந்துபவர்களுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் மூடிவிடுகிறான். அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே கையேந்துகிறவர்களுக்கு கொடுக்கும் வாசலை முழு மையாகத் திறந்து விடுகிறான் அல்லாஹ் என்ற” என்ற ஹதீஃத் இம்மவ்லவிகளுக்குத் தெரியாதா?
இங்கு இன்னொரு விஷயத்தையும் முக்கிய மாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மீது 3:110, 9:71, 103:1-3 மூலம் விதிக்கப்பட்ட கடமையான மார்க்கப் பணிகளுக்கு, அவற்றைச் செய்யாவிட்டால் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற வகையிலுள்ள மார்க்கப் பணிகளுக்கு கூலி-சம்பளம் வாங்குவது மட்டுமே தடுக்கப் பட்டுள்ளது. நம்மீது விதிக்கப்படாததை அதாவது செய்யா விட்டால் ஏன் செய்யவில்லை என்று கேட்டுத் தண்டிக்கப்படாத பணிகளான குர் ஆனை, ஹதீஸ்களை எழுதிக் கொடுப்பது, மொழி பெயர்ப்பது, நூல்கள் வெளியிடுவது, வெளியூர்களுக்கு அழைப்பின் பேரில் சென்று பிரசாரம் செய்யும்போது பயணப்படி இவை அனைத்திற்கும் பணம் பெறுவது மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் நபிமார்கள் செய்த மார்க்கப் பணிகள் மட்டுமே முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அவை அல்லாத வைக்கு கூலி-சம்பளம் பெறுவதை மார்க்கம் தடை செய்யவில்லை என்பதே சரியாகும்.
இதை ஆதாரமாக வைத்து இமாமத் செய்வது எங்கள் மீது கடமை இல்லையே என்று மவ்லவிகள் எதிர்க் கேள்வி கேட்கலாம். நபி(ஸல்) இமாமத் செய்தார்கள். ஆனால் அதற்காக ஊதியம் பெறவில்லை. மேலும் யாராக இருந்தாலும் ஐங்கால தொழுகை கடமை. உள்ளூரில் இருக்கும் போது ஜமாஅத்தும் வலியுறுத்தப்பட்ட சுன்னத். அந்த அடிப்படையில் ஒரு மவ்லவி பள்ளிக்குச் செல்லும்போது, அந்த மஹல்லாவாசிகளில், நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளபடி இமாமத் செய்யும் தகுதி அவருக்கே இருக்கிறது. எனவே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அம்மக்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. எனவே இதைக் காரணம் காட்டி தொழ வைக்க கூலி-சம்பளம் பெற முடியாது.
இமாமத், பிரசார பணிகளை ஈமானின் உறுதியோடு அல்லாஹ்வையும், மறுமையையும் மிகமிக உறுதியாக நம்பி, அல்லாஹ்விடமே அவற்றிற்குரிய கூலியை எதிர்பார்த்து தூய எண்ணத்தோடு செய்ய முன் வந்தால் நிச்சயமாக அல்லாஹ் அதற்குரிய வழியை எளிதாக்கித் தருவான். இது 29:69ல் அல்லாஹ் உறுதியாக அளிக்கும் உத்திரவாதமாகும்.

4/23/2012

வெள்ளிக்கிழமை


சென்ற வாரம் குத்பா உரைய
முகம்மது மைதீன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நல்ல ஒரு குத்பா சொற்பொழிவு
ஏராளனமான மக்கள் பயன் பெற்றனர்.

beautiful masjid

உளுச் செய்யும்முன்

உளுச் செய்யும்முன்

بِسْمِ الله

அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு - In the name of Allah.



உளுச் செய்தபின்

أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்)இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். நூல்: முஸ்லிம்

I bear witness that none has the right to be worshipped except Allah, alone without partner, and I bear witness that Muhammad is His slave and Messenger.’



اللّهُـمَّ اجْعَلنـي مِنَ التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين.

அல்லாஹ் பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக! நூல்: திர்மிதீ

O Allah, make me of those who return to You often in repentance and make me of those who remain clean and pure.



سُبْحـانَكَ اللّهُـمَّ وَبِحَمدِك أَشْهَـدُ أَنْ لا إِلهَ إِلاّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَـيْك .

யா அல்லாஹ்! உனது புகழைக்கொண்டு உன்னை துதிக்கின்றேன். உன்னிடம் பிழை பொருக்கத் தேடுகிறேன். உன்னிடமே தவ்பாவும் செய்கிறேன்.
நூல்: நஸாயீ
அமலுல்யவ்மி வல்லைலா

How perfect You are O Allah, and I praise You, I bear witness that none has the right to be worshipped except You, I seek Your forgiveness and turn in repentance to You.

தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா?

இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.

கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.

“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.

“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.

ரமழானில் மட்டுமே நோற்க வேண்டிய நோன்பை, அந்த மாதத்தில் வைக்காதவர்கள் வேறு நாட்களில் நோற்கும்படி அல்லாஹ் அனுமதிக்கிறான். அதுபோல உரிய நேரத்தில் தொழப்படாத தொழுகைகளை வேறு நேரத்தில் தொழுது கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதம் எந்த விதத்திலும் சரியானதல்ல. நோன்பை வேறு மாதங்களில் நோற்கலாம் என்று கூறிய அல்லாஹ் தொழுகையை வேறு நேரத்தில் தொழலாம் என்று கூறுகின்றானா? என்றால் இல்லை. ஒரு இடத்திலும் கூறவில்லை.

மாறாக அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகிறான்:
”மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக தொழுகை உள்ளது”. (அல்குர்ஆன் 4:103)

தொழுகையை அதற்கென குறிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழுதாக வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டதால் நோன்புடன் தொழுகையை ஒப்பிட முடியாது.

இன்னொரு வேறுபாட்டையும் நாம் காண்போம்.
“”மாதவிடாய்க் காலங்களில் நாங்கள் விட்டு விட்ட நோன்புகளை “”களா” செய்யும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டிருந்தோம். ஆனால் அதே காலங்களில் விடுபட்ட தொழுகைகளை “”களா” செய்யும்படி நாங்கள் ஏவப்படவில்லை”. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம்.

“”களா” விஷயத்தில் நோன்பும், தொழுகையும் வெவ்வேறானவை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. நமது இஷ்டத்திற்கு காலம் கடத்திவிட்டு நாம் விரும்புகின்ற எந்த நேரத்திலாவது அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

இன்னொரு வேறுபாட்டைக் காண்போம்.
நோன்பு என்பது எல்லா மாந்தருக்கும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டிய கடமை.மாற்று முறை எதுவும் கிடையாது. அதனால் அதை நிறைவேற்ற இயலாத நோயாளிகளாக நோன்பை நோயுற்ற நாட்களில் நோற்க இயலாது போகலாம்.

ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அந்த நிலமை இல்லை. நின்று தொழ முடியவில்லை என்று காரணம் கூறி காலதாமதப் படுத்த முடியாது.

“எனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக (என்னால் தொழ முடியாமலிருப்பதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் “”நின்று தொழு” அதற்கு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு!” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரழி) நூல்கள்: புகாரி, அபூதாவூது, அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதீ, நஸாயீ.
எனவே இயலாமையைக் காரணம் கூறி தொழுகையை களாவாக ஆக்க முடியாது. பயணத்திலிருப்பவன் பட்டினியாகப் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் நோன் புக்குச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் தொழுகையைப் பொறுத்து அந்த அனுமதி கிடையாது.

நான்கு ரகாஅத் தொழுகைகளை இரண்டு ரகஅத்களாக குறைத்துக் கொள்ளத்தான் அனுமதிக்கின்றான் அல்லாஹ். (அல்குர்ஆன் 4:101)

ஆக நோன்புக்கு இருப்பது போன்ற “களா’ என்பது தொழுகைக்குக் கிடையாது என்பதை நாம் தெளிவாக உணரலாம். மனித வாழ்வில் ஏற்படுகின்ற எந்தப் பிரச்சனைக்காகவும் தொழுகையைப் பிற்படுத்த முடியாது. போர்க்களத்தில் கூட ஒரு பிரிவினர் போர் செய்யும் போது, இன்னொரு பிரிவினர் தொழ வேண்டும். பின்னர் இவர்கள் போர் செய்யும் போது அவர்கள் தொழ வேண்டும் என்பதைத் திருகுர்ஆனின் 4:102 வசனம் குறிப்பிடுகின்றது. “களா’ செய்ய அனுமதி இருக்குமானால் இந்த இக்கட்டான கட்டத்தில் களா செய்ய இஸ்லாம் அனுமதித்திருக்கும். ஆனால் இந்தக் கட்டத்திலும் “களா’வை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, ஓர் இடத்தில் நின்று தொழுதால் எதிரிகளால் ஏதேனும் ஆபத்து வந்து விடுமென்று அஞ்சினால் அப்போதும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. மாறாக நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழுதாக வேண்டும் என்பதை திருகுர்ஆனின் 2:239 வசனம் குறிப்பிடுகின்றது.

ஒளூ செய்வதற்குத் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை என்றும் காரணம் கூறி களாவாக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் கிடைக்காதவர்கள் “தயம்மம்’ செய்து தொழும்படி திருகுர்ஆனின் 4:43 வசனம் கட்டளை இடுகின்றது.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது எப்படியும் குறிப்பிட்ட தொழுகையை நிறைவேற்ற முடியாது போகும் என்றும் கூற முடியாது. லுஹரையும், அஸரையும் ஒரே நேரத்தில் மஃரிபையும், இஷாவையும் ஒரே நேரத்தில் களா இல்லாமலே தொழவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஆக எந்தக் காரணத்திற்காகவும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. அப்படிக் காலம் கடந்து தொழுவதால், அது அந்தத் தொழுகைக்கு எந்த விதத்திலும் ஈடாக முடியாது.

“எவனுக்கு அஸர் தொழுகை தவறி விட்டதோ அவனது பொருளும், குடும்பமும் தவறிவிட்டது போன்றதாகும்” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இதிலிருந்து தவறியது தவறியதுதான். அதைத் திரும்ப அடைய முடியாது என்று உணரலாம். இவ்வாறு களாவாக்குவது மிகப் பெரும் குற்றம்தான். அல்லாஹ் மிக அதிகமாக வற்புறுத்துகின்ற ஒரு கடமையை வீணடித்தவனாக அவன் ஆகின்றான்.

நீண்ட காலமாகவோ,அல்லது சில வேளைகளோ தொழுகையை விட்டவன் என்ன செய்யவேண்டும்? இதற்குப் பரிகாரமே கிடையாதா? அதையும் அல்லாஹ் அழகாகச் சொல்லித் தருகிறான்.

“அவர்களுக்குப் பின்னால் தொழுகையை பாழ்படுத்தி, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றியவர்கள் தோன்றினார்கள். அவர்கள் நரகில் போடப்படுவார்கள். (நடந்து விட்ட இந்த பாவத்துக்காக) திருந்தி மன்னிப்புக் கேட்டு நற்கருமங்களைப் புரிந்தவர்கள் தவிர (மற்றவர்கள் தான் நரகை அடைவர்) இவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 19:59,60)

இப்படித் தொழுகையைப் பாழ்படுத்தியவர்கள் இனிமேல் இப்படிப் பழாக்க மாட்டோம் என்று மனம் திருந்தி செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் அந்த மாபெரும் குறையை நிவர்த்தி செய்வதற்காக இயன்ற அளவு நபிலான வணக்கங்களில் ஈடுபடவேண்டும்.

ஆக தொழுகையைக் களாவாக ஆக்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. களாவாக ஆக்கி விட்டு வேறு நேரத்தில் தொழுவது அதற்கு ஈடாக ஆகவும் முடியாது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

“உமர்(ரழி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரழி) ஸல்மான் அல்பார்ஸி(ரழி) போன்ற நபிதோழர்களின் கருத்தும், முஹம்மது இப்னு ஸீரின்(ரஹ்) உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) போன்ற அறிஞர் களின் கருத்தும் இதுதானே” என்று இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: ஃபிக்ஹுஸுன்னா)

ஆரம்ப காலத்தில் களா செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் அவ்வாறு “களா’வாக ஆக்கி இருக்கின்றார்கள். பின்னர் அந்த அனுமதியை அல்லாஹ் ரத்துச் செய்துவிட்டான்.

அதற்கான ஆதாரம் வருமாறு:
“”அகழ்ப் போரின் போது, (அகழ்ப் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக) லுஹர், அஸர், மஃரிபு ஆகிய தொழுகைகளை உரிய நேரத்தில் நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் தொழவில்லை. இஷா நேரத்தில் வரிசைக் கிரமமாக பாங்கு, இகாமத்துடன் அந்தத் தொழுகைகளை நிறைவேற்றினார்கள்” இந்த நிகழ்ச்சி திருகுர்ஆனின் 2:239வது வசனம் இறங்குவதற்கு முன் நடந்ததாகும் என்று அபூஸயீது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஹதீஸின் கருத்து). நூல்கள்:அஹமது, நஸயீ.

“போர்க் காலங்களில் கூட உரிய நேரத்தில் தான் தொழ வேண்டும்” என்ற உத்தரவு வருவதற்கு முன்பு தான் இந்த நிலமை இருந்திருக்கின்றது என்பதை மேற்கூறிய ஹதீஸ் தெளிவாக்குகிறது.

இரண்டே இரண்டு காரணங்களினால் மட்டுமே, உரிய நேரம் தவறிய பிறகும் நிறைவேற்ற வேண்டும்.

“யாரேனும் மறதியின் காரணமாகவோ, அல்லது தூக்கத்தின் காரணமாகவோ, (உரிய நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, விழித்தவுடன் அதைத் தொழட்டும்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

(இதே கருத்துக் கொண்ட பல ஹதீஸ்கள், புகாரி, முஸ்லிம் அபூதாவூது, நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் காணப் படுகின்றன)

ஒருவன் தூங்கிவிட்டு தொழுகையின் நேரம் முடிந்த பிறகு எழுந்தான் என்றான், எழுந்த உடனே அதைத் தொழ வேண்டும். அது போல் மறதியின் காரணமாக ஒரு தொழுகையை நேரம் தவறவிட்டு விட்டால், நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுதிட வேண்டும் என்பதை நபி(ஸல்) தெளிவுபடுத்துகின்றார்கள். இந்த இரண்டு காரணங்கள் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் “களா’வாக ஆக்க முடியாது.

“நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் பயணத்தில் செல்லும்போது ஓரிடத்தில் உறங்கி விடுகிறார்கள். உறங்குவதற்கு முன் பிலால் (ரழி) அவர்களை மட்டும் விழித்திருக்கும்படியும், சுபஹு தொழுகைக்கு எழுப்பும்படியும் கூறுகிறார்கள். பிலால்(ரழி) அவர்களும் தன்னை அறியாது உறங்கி விடுகிறார்கள். சூரியன் நன்றாக உதித்த பின்னர் தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று வழக்கம்போல பாங்கு சொல்லி சுன்னத் தொழுது பின்னர் இகாமத் சொல்லி ஜமா அத்துடன் தொழுதிருக்கிறார்கள்” (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ கதாதா(ரழி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்

(நஸாயீயிலும் இதே கருத்து பதிவு செய்யப் பட்டுள்ளது)

தூக்கம் மறதியின் காரணமாக விட்டுவிட்ட தொழுகைகளைத் தாமதமின்றி விழித்தவுடன், நினைவு வந்தவுடன் தொழுதிட வேண்டும். உரிய நேரத்தில் தொழும்போது எப்படி பாங்கு, இகாமத், சுன்னத்களுடன் தொழ வேண்டுமோ அவ்வாறே அதனை நிறை வேற்றவும் வேண்டும். அந்தத் தொழுகைக் குரிய நேரம் அதுதான் என்றாகி விடும்போது, களா என்ற பிரச்சனையே இல்லை.

ஆக கடந்த காலங்களில் தொழுகைகளை விட்டது மிகப் பெரும் பாவம். இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக பெரும் பாவம். மிகப் பெரும் பாவத்திற்கு எப்படி உள்ளம் உருகி பாவமன்னிப்புக் கோர வேண்டுமோ அவ்வாறு பாவ மன்னிப்புக் கோருவதும், உபரியான வணக்கங்கள் புரிவதும் தான் அதற்குப் பரிகாரம். மேற்கூறிய இரண்டு காரணங்கள் தவிர வேறு காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்தக் கூடாது.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

thanks ; readislam

4/06/2012

ஸலவாத்துன்னாரிய்யா

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் ‘உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவது’ என்று கேட்டபோது, நபி அவர்கள் ‘ஸலவாத்’ கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை ‘ஸலவாத்’ என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து நாமாகப் புதிய ‘ஸலவாத்’ களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக ‘பித்அத்’ஆக அவை கருதப்படும். இதற்கு உதாரணமாக ‘இப்னு அபீ ஜைது’ என்ற அறிஞர் ‘வர்ஹம் முஹம்மதன் வஆல முஹம்மத்’ என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறிஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து ‘அவர் மார்க்கத்தை அறியாதவர்’ என்றும் முடிவு கட்டியது.

நபி அவர்கள் ஸலவாத் எப்படிக் கூறுவது என்று நமக்கு தெளிவாக கூறியிருக்கும் போது ‘புதிதாக ஒரு ஸலவாத்தை உருவாக்குவது பித்அத் ஆகும்’ என்றும் அன்றைய அறிஞர் பெருமக்கள் அவரைக் கண்டித்துள்ளனர். ‘திர்மிதி’ என்ற ஹதீஸ் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் அபூபக்ரு இப்னுல் அரபி(ரஹ்) அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்ட பின் ‘ஸலவாத்துன்னாரிய்யா’ என்று நம்மவரிடையே பிரபல்யம் அடைந்துள்ள ஸலவாத்தை அலசுவோம்.

இந்த ‘ஸலவாத்துன்னாரியா’ என்ற ஸலவாத்தை நபி அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை. நாற்பெரும் இமாம்களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்ததில்லை.

மிகமிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த ஸலவாத்தைத் தயார் செய்தனர். நபி அவர்கள் கற்றுத்தந்துள்ள எண்ணற்ற ஸலவாத்துக்கள் இருக்க, இப்படிப் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்ட ‘ஸலவாத்துன்னாரியா’ மக்களிடம் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இதைச் சொல்வதால் ஸலவாத்தின் நன்மை நிச்சயம் கிடைக்காது. இதன் பின்னனியில் ஏராளமான பித்அத்கள் வேறு நடந்து கொண்டுள்ளன. இதை 4444 தடவை ஓத வேண்டுமாம். இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்தவர் யார்? அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் அவர்களுக்கும் தவிர இப்படி எண்ணிக்கைணை நிர்ணயிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

இந்த ‘ஸலவாத்’ ஓதுவதால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற குருட்டு நம்பிக்கை வேறு! இந்த ‘தீனை’ வைத்து சம்பாதிப்பவர்கள் தான் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்பதை சிந்தனை உள்ள எவரும் உணரலாம். 4444 என்று பெரும் எண்ணிக்கைணைச் சொன்னால் மக்கள் தானாக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது. அதற்கென்று ஓதத் தெரிந்தவர்கள் அழைப்பார்கள் அதற்கு சில்லரைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது.

இத்தகைய பித்அத்தான சொற்றொடர்களைச் சொல்வதால் நன்மை கிடைப்பதற்கு பதிலாக தீமைதான் ஏற்படும். ஏனெனில் நபி அவர்கள் எல்லா பித்அத்களும் வழிகேடு என்று சொல்லி இருக்கின்றார்கள். (புகாரி)

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஸலவாத்துன்னாரிய்யா’ வின் பொருளும் குர்ஆன், ஹதீதுகளின் வழிகாட்டுதலுக்கு முரண்படுகின்றது.

‘கிறித்தவர்கள் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். (நூல்கள்: புகாரி, தாரமி, அஹ்மத், ஷமாயிலெ திர்மிதீ) என்ற நபி அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாகவே இதன் பொருள் அமைந்துள்ளது.

‘யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்ந்து விடுமோ; எவர் மூலம் கஷ்டங்கள் அகன்று விடுமோ; எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ; எவர் மூலம் ஆசைகள் பூர்த்தி செய்யப் படுமோ; எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை பெறப்படுமோ அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக!’ இது தான் ஸலவாத்துன்னாரிய்யாவின் பொருள்.

அல்குர்ஆனையும் நபி மொழிகளையும் ஓரளவு அறிந்தவர்கள் கூட இந்தப் பொருளை ஏற்க மாட்டார்கள்! இதில் சொல்லப்படுகின்ற தன்மைகள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறிடுவார்கள்.

‘நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்கள் மூலம் கஷ்டங்கள் அகன்று விடும்’ என்று அல்லாஹ்வோ, அவன் திருத் தூதரோ நமக்குச் சொல்லித் தரவில்லை. ‘அல்லாஹ்வின் மூலமாகவே கஷ்டங்கள் விலக முடியும்’ என்று தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போதனை செய்தார்கள்.

‘அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே நான் நன்மை செய்து கொள்ளவோ தீங்கிழைத்துக் கொள்ளவோ சக்தி பெற்றிருக்கவில்லை’ என்று சொல்வீராக! (அல்குர்ஆன் 10 :49)

அல்லாஹ் இப்படித்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கூறச் சொல்கிறான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவ்வாறே கூறினார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் 23 ஆண்டு கால பிரச்சசார வாழ்க்கையில் அவர்கள் பட்ட கஷ்டங்களே இதற்குச் சரியான சான்றுகளாகும். எத்தனை முறை அடிக்கப்பட்டிருக்கிறார்கள்? பைத்தியம் என்று எள்ளி நகையாடப் பட்டிருக்கிறார்கள்! ‘தாயிப்’ நகரில் இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் அடிக்கப்பட்டார்கள்! சொந்த ஊரிலேயே இருக்க முடியாத நிலமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்! உஹதுப் போர்க் களத்தில் ‘பல்’ உடைக்கப்பட்டது! இது போன்ற இன்னும் பல கஷ்டங்களுக்கு அவர்களே ஆளானார்கள்.

அவர்களின் அன்புத் தோழர்களில் பலர் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள்! சுடு மணலில் கிடத்தப்பட்டார்கள்! மர்ம ஸ்தானத்தில் அம்பு எய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்! தூக்கு மேடையிலும் ஏற்றப்பட்டார்கள்! பல போர்க்களங்களில் ஷஹீதாக்கப்பட்டார்கள்! நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்களின் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகளும் தொடர்ந்தன. இது போன்ற சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இ ‘தன் மூலமாகக் கஷ்டங்கள் விலகும்’ என்று கூறிடவில்லை.

‘தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும்’ என்ற ஆசை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. ஆனால் கடைசி வரை அந்த ஆசை பூர்த்தி செய்யப்படவில்லை ஏன் அபூஜஹல் உட்பட எல்லாக் காபிர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்ற பேராசையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. அதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான். ‘அவர்கள் இந்த (வேத) அறிவிப்பில் ஈமான் கொள்ளவில்லை என்பதற்காக கை சேதப்பட்டு உன்னையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்’ (அல்குர்ஆன் 18:6) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டும் அளவுக்கு காபிர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தார்கள். அந்த ஆசையை அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை.

அவர்களின் 23 ஆண்டுகால வாழ்க்கையில் துன்பங்கள் தான் இன்பங்களை விடவும் அதிகமாக இருந்தன. தாங்களே கஷ்டத்திற்கு ஆளாகி நின்ற போது ‘அல்லாஹ்தான் நீக்கக் கூடியவன்’ என்றே போதித்தார்கள். திருக்குர்ஆனும் பல இடங்களில் இதை மிகத் தெளிவாகவே கூறுகின்றன.

(2:272) (3:128) (6:17) (6:50) (6:66) (7:188) (10:106,107) (11:63) (28:56) (42:52) (49:9) (72:21,22)
ஆகிய வசனங்களை ஒருவர் சிந்தித்தால் இந்த ஸலவாத்துன்னாரிய்யாவின் கருத்தை தவறு என்று புரிந்து கொள்வார். கருத்தின் அடிப்படையிலும் இந்த ஸலவாத்துன்னானரிய்யா தவறாக உள்ளது என்பதால் இதை ஓதுவது கூடாது என்று உணரலாம்.

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதை ஸலவாத் என்று சொல்லித் தந்தார்களோ அதை ஓதி நன்மை அடைவோமாக! பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட உலா வருகின்ற பித்அத்தான ஸலவாத்களை விட்டொழிப்போமாக!

thanks : readislam

மன திருப்தி

எவர் தம்மிடம் இருக்கும் ஒரு நாளைக்குப் போதுமான சாதத்தைக் கொண்டு தம் மனத்துக்கு நிம்மதியையும் தம் உடலுக்குத் தெம்பையும் கொடுத்துக் கொள்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டவர் போலாவார் என்று அண்ணல் நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸனில் கதமீ (ரலி) நூல்: திர்மிதி

எவர் இஸ்லாமிய நேர்வழியை அடைந்து அவரால் இயன்றதைக் கொண்டு வாழ்க்கை நடத்தி போதுமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு நல்வாழ்வு உண்டாகட்டும் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: புலாளதுப்னு உபைது (ரலி) நூல்:திர்மிதி

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நம்பிக்கை கொண்டிருப்பின் நிச்சயமாக அவன் உங்களுக்கு உணவளிப்பான், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று. அவை காலையில் வெறும் வயிற்றோடு சென்று மாலையில் வயிறு நிரம்ப உண்டு திரும்புகின்றன என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: உமர் (ரலி) திர்மிதி

செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: நூல்கள்: புகாரி, முஸ்லிம்

உங்களில் எவரேனும் தம்மைவிட அதிகப் பொருளுடையவரையும் தோற்றத்தில் தம்மைவிட மேலாக உள்ளவரையும் காண நேரிட்டால் அப்பொழுது அவர் தம்மைவிட இவ்விஷயங்களில் கீழாக உள்ளவரை நோக்கவும், ஏனெனில் இவ்விதம் செய்வது நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை, அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை குறைவாகக் கருதாமலிருக்க மிகவும் உதவியாயிருக்கும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...