8/12/2015

பேச்சின் ஒழுங்குகள்


ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.
சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் ‘நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்’ என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.
விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.
மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.
ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.
நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்
நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.
இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் (33:70)
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். அல்குர்ஆன் (35:10)
ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2989)
நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள் ”அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ”எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். ”சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9996)
நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி (6023)
இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது. ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)., நூல்: புகாரி (5754)
தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.
சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ”பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். ”தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்” என்று கூறினோம். அதற்கு அவர்கள், ”அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி), நூல்: முஸ்லி­ம் (4020)
இஸ்லாம் காட்டும் பேச்சின் ஒழுங்கு முறைகளை கடைபிடித்து இம்மை மறுமை நன்மைகளை பெறுவோமாக!……………………….

6/21/2015

தீனியாத் வகுப்புகள்


தினமும் லுஹர் தொழுகைக்குப்பின் பள்ளியில்


நடைபெறுகிறது. அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்தார் பதிவுகள்




நோன்பு கஞ்சி




இரவுத்தொழுகை



6/19/2015

இனிய ரமலான் வாழ்த்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் புணித ரமலான் மாதத்தின் முதல் நாள் இன்று முதல் நமது ஊரில் துவங்கியது.. ரமலான் மாதம் வந்ததால் இஷாத் தொழுகை இரவு 8 ; 45 மணிக்கும் , அதைத்தொடர்ந்து இரவுத்தொழுகை இரவு 9;00 மணிக்கும் நடைபெறுகிறது. ஆண்களும் பெண்களும் ரமலான் மாதத்தின் நண்மையை நாடி பள்ளிக்கு தொழ வருகிறார்கள். முதல் நான்கு ரக் அத் கள் முடிந்ததும் சிறிது நேரம் நமது பள்ளியின் இமாம் இப்னு அப்பாஸ் அவர்கள் சிற்றுரை ஆற்றுகிறார்கள். இரவுத்தொழுகை சகோதரர் கவுஸ் அவர்கள் (ஹாபிஸ்) வைக்கிறார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!

6/11/2015

நோயாளியிடம் நலம் விசாரித்தல்




நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் போதனைகள் இஸ்லாமிய சமூகத்தில் வெகு ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாழ்வில் ‘தான் நோய்வாய்ப்பட்டால் தனது சகோதரன் தன்னை நலம் விசாரிக்க வர வேண்டும், அது அவனது கடமை’ என்று எண்ணுமளவு இப்பண்பு வலுப்பெற்றுள்ளது. அதை மறந்துவிட்டால் அல்லது அதில் குறை ஏதும் செய்துவிட்டால் அவன் தனது சகோதரனின் கடமையை மறந்தவன். அல்லது சகோதரனின் கடமைகளில் குறை செய்தவனாகிறான். அவன் இஸ்லாமின் மேலான பார்வையில் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட பாவியாகிறான்.
நபி (ஸல்) அவர்கள், ”முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து” என கூறியபோது நபி (ஸல்) அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.” (ஸஹீஹுல் புகாரி)
ஒரு முஸ்லிம் தனது சகோதரனை நோய் விசாரித்தால் அவர் ஏதோவொரு கடமையைச் செய்து முடித்தோம் என்று எண்ணிவிடக் கூடாது. மாறாக, தனது செயலுக்காக அவர் ஆனந்தமடைய வேண்டும். பின்வரும் நபிமொழியின் கருத்தைக் கவனிக்கும்போது நலம் விசாரிப்பதன் மேன்மையை அறிந்துக் கொள்ளலாம்.
நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் ”ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.
”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.
”ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)
நோயாளியை நலம் விசாரிப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய நற்செயல்! பலவீனப்பட்ட நோயாளியான தமது சகோதரனின் விருப்பத்தை நிறைவு செய்வது எவ்வளவு உயர்ந்தது! நலம் விசாரிப்பவன் அந்த சந்தர்ப்பத்தில் மகத்துவமிக்க தனது இரட்சகனிடம் நிற்கிறான். அல்லாஹ் அவனது நற்செயலுக்கு சாட்சியாகி மாபெரும் கொடையை வாரி வழங்குகிறான். இதன்மூலம் நலம் விசாரிப்பதை பரக்கத்தானதாகவும் மிக உயர்ந்த செயலாகவும் அல்லாஹ் நிர்ணயித்து அதனை செய்யத் தூண்டுகிறான். இவ்வாறு நலம் விசாரிக்காதவன் எவ்வளவு பெரிய நஷ்டவாளி, மாபெரும் இழிவும் வேதனையும் அவனை மறுமையில் சூழ்ந்து கொள்கிறது. உலகப் படைப்புகள் அனைத்தின் முன்னிலையில் அவனிடம் ”ஆதமின் மகனே! நான் நோயுற்றபோது நலம் விசாரிக்க ஏன் வரவில்லை? எனது இன்ன அடியான் நோயுற்றபோது நீ நலம் விசாரிக்கவில்லை. அவனை நலம் விசாரித்திருந்தால் அங்கு என்னை நீ பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?” என்று அல்லாஹ் கூறுவது அவனுக்கு மாபெரும் கேவலமாகும். தனது சகோதரனை நலம் விசாரிக்காமல் தவறிழைத்த மனிதன் அடையப்போகும் சஞ்சலம், கைசேதம் பற்றி இப்போதே சிந்திப்போம். ஏனெனில் மறுமை நாள் வந்தபின் உலகிற்கு மீண்டு வரமுடியுமா?
இஸ்லாமிய சமூகத்தில் நோயாளி என்பவன் தனது துன்பத்திலும் சிரமத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையிலும் ‘தான் ஆதரவற்ற அனாதையல்ல, தன்னை இந்தச் சிரமத்திலிருந்து மீட்பதற்கு அல்லாஹ்வின் துணையுடன் உதவியாளர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு அவனது உள்ளத்தில் தோன்ற வேண்டும். இது மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இஸ்லாமின் உன்னதப் பண்பாகும். இது முஸ்லிம்களிடையே தவிர வேறெங்கும் காணமுடியாத அற்புதப் பண்பாகும். மேற்கத்திய நாடுகளில் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளும், திறமையான மருத்துவர்களும், உயர்ந்த மருந்துகளும் உள்ளன. எனினும் உறவினர்கள், நண்பர்களின் கனிவான அணுகுமுறை, ஆறுதலான வார்த்தைகள், மலர்ந்த புன்னகை, தூய்மையான பிரார்த்தனைகள் என்பது அந்த நேயாளிகளுக்கு மிகக் குறைவாகவே கிட்டுகின்றன. பொருளியலை அடிப்படையாகக் கொண்ட சிந்தனை மேற்கத்தியரை ஏமாற்றிவிட்டதுதான் இதற்குக் காரணமாகும். அது மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் அழித்து உலகில் பலன் கிடைக்காத நற்செயல்கள் செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்துவிட்டது. மனிதன் நோயாளியை சந்தித்து ஆறுதல் சொல்வதால் விளையும் நன்மைகளை உணரமாட்டான். ஒருவரை தான் சந்தித்து, அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமெனில் அவரிடமிருந்து தனக்கு உடனடியாகவோ, பிற்காலத்திலோ ஏதேனும் பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் அவனது அணுகுமுறை அமைந்திருக்கும். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு நோயாளியை சந்தித்து, ஆறுதல் கூற தூண்டுகோலாக அமைவதெல்லாம் இந்த நேரிய பாதையில் செல்பவர்களுக்கென அல்லாஹ் தயார் செய்துள்ள நன்மைகள்தான். இதற்கான சான்றுகள் ஏராளமானவை. இவை சகோதரத்துவ உணர்வை வளர்த்து நோயாளியை சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள், நோய் விசாரிப்பதால் நோயாளியின் மனதிலும் அவரது குடும்பத்தினரிடையேயும் மனிதநேயச் சிந்தனைகள் வளர்வதை அறிந்திருந்தார்கள். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளின் நலம் விசாரிப்பதில் ஒருபோதும் சடைந்ததில்லை. அவர்கள் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி பிரார்த்தனையும் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு பணிவிடை செய்து வந்த யூதச் சிறுவனைக் கூட நலம் விசாரிக்கச் சென்றதிலிருந்து நபி (ஸல்) அவர்களின் மேலான வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி (ஸல்) அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் ‘நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்’ என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ”நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!” என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், ”இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலும் அவரை இஸ்லாமின்பால் அழைக்கத் தவறவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்றது, அச்சிறுவர் மனதிலும் அவரது தந்தையின் மனதிலும் நபி (ஸல்) அவர்களின் கருணையையும், மேன்மையையும் ஆழப்பதியச் செய்தது. எனவே அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகை அவர்களுக்கு நேர்வழியை அருளியது. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறும்போது அவர்கள் அச்சிறுவரை நரகிலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் தான் எத்தகு மகத்தான மனிதர்! அவர்களது இறையழைப்புதான் எவ்வளவு விவேகமானது! நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளை நலம் விசாரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவமளித்ததுடன் அது விஷயத்தில் தங்களது தோழர்களுக்கு சில அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான் நோயாளியின் தலைமாட்டில் அமர்ந்து நலம் விசாரிப்பதும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ”உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.” (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒழுக்கங்களில் ஒன்றுதான் தங்களது வலது கரத்தால் நோயாளியை தடவிக் கொடுத்து, அவருக்காக துஆச் செய்வதும்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா” என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ”யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ”கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நோயாளிகளை நலம் விசாரிப்பதில் முஸ்லிம்கள், தலைமுறை தலைமுறையாக இப்புகழுக்குரிய நபிவழியைப் பின்பற்றி வருகிறார்கள். ஒருவருக்கொருவர் கருணையிலும் அன்பிலும் உதவி செய்து கொள்வதிலும் எடுத்துக்காட்டாகத் திகழும் இப்பண்பு முஸ்லிம்களின் தனித் தன்மையான அடையாளமாகவே நிலைபெற்றுத் திகழ்கிறது. இப்பண்பு வாழ்க்கை சுமையால் அழுந்திப்போன முதுகை நிமிர்த்துகிறது; கவலையில் வீழ்ந்தவனின் கண்ணீரைத் துடைக்கிறது; துன்பங்களால் சூழப்பட்டவனை விடுவிக்கிறது; நிராசையடைந்தவனுக்கு நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது; சகோதரத்துவ அன்பை உறுதிப்படுத்துகிறது; வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

5/22/2015

ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!


“எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” (2:174)


ஆலிம்கள் உங்களுக்கு எதை மார்க்கமாய் போதிக்கிறார்கள்? சற்று சிந்தியுங்கள். அவர்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவதற்காக மார்க்கத்திற்கு எதிரானவையெல்லாம் மார்க்கமாய் போதிக்கின்றார்கள். அவைகளை இன்னமும் நீங்கள் உணராமல் இருக்கின்றீர்கள். நாங்கள் தன்னிச்சையாக ஆலிம்கள் விமர்சிப்பதாய் முகம் சுளிக்காதீர்கள். அல்லாஹ்(ஜல்) வின் கூற்றை கூர்ந்து கவனியுங்கள்.*
“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகின்றனர். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள்”. (9:34)
* மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அறிவில்லாமல் வீணானவற்றை விலைக்கு வாங்கி, அவற்றால் மக்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், பரிகாசமாக்கிக் கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தைகையோருக்கு மகத்தான வேதனையுண்டு”. (31:6)
ஆலிம்கள் தங்கள் வயிறுப் பிழைப்புக்காக மார்க்கத்தின் பெயரால் செய்துவரும் மோசடிகளை ஆலிம்களுக்கு வருமானம் தேடித்தரும் சில சடங்கு சம்பிரதாயங்கள், கீழேப் பட்டியலிடப்படுகிறது
.* மவ்லிதுகள் – இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முதல் பல்வேறு வலிமார்கள் பெயரால் ஓதப்படும் மவ்லிதுகள்.இறந்தவர்கள் பெயரால் 3ம் ஃபாத்திஹா, 7ம் ஃபாத்திஹா, 40 ம் நாள் பாத்திஹா, 6-ம் வருடப் பாத்திஹா என்று வருடம் தோறும் தொடரும் ஃபாத்திஹாக்கள் மற்றும் இறந்தவர்கள் பெயரால் நிகழ்த்தப்படும் அத்தனைச் சடங்கு சம்பிரதாயங்களும் ஃபீஸ்!*
மீலாத் மாநாடுகளில் உரையாற்றுவதற்கும், மார்க்கச் சிறப்பு சொற்பொழிவுகளும் ஃபீஸ்! (இதில் ஆலிம்களின் வழியை அப்படியே் பின்பற்றி ஆலிம்களல்லாதோரும் ஃபீஸ்
வாங்குதல்).* திருமண விழாவிற்காகப் போடப்படும் பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சிக்கு ஃபாத்திஹா ஓதிவிட்டு ஃபீஸ் வாங்குதல், மணமகனுக்கு மாலைச்சூட்டியவுடன் ஓதப்படும் பாத்திஹாவுக்கு ஃபீஸ்! நகர்வலம் பள்ளிவாசல் வந்தடைந்ததும் பள்ளியை முன்னோக்கி ஃபாத்திஹா ஓத ஃபீஸ்! இன்னும் ஊர்தோறும் மாறிக் கொண்டிருக்கும் புதுப்புது திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்திற்கும் ஃபீஸ்!
* சந்தனக்கூடு கூடாதென்று காரசாரமாய் பேசிவிட்டு – தாரைத்தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், வான வேடிக்கை, கரக ஆட்டம், மயில் டான்ஸ், பொய்க்கால் குதிரை, இத்தியாதி… இத்தியாதிகளோடு வலம் வரும் சந்தணக் கூடு பள்ளிவாசல் முன் நிற்கையில் அதற்கு துஆ ஓதி ஃபீஸ் பெறுதல்!
* புதுவீடு புகுதல், சுன்னத்(சுத்னா) வைபவம்! காதணி அணிவிக்கும் வைபவம்! இதுப் போன்ற நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஃபீஸ் பெறுதல்!
* பில்லி -சூன்யம் -தாயத்து -தட்டு -நூல் முடிதல் -தகடு தயாரித்தல் -பால் கிதாபு பார்த்தல் -பேய் ஓட்டுதல், அப்பப்பா…! இன்னும் எத்தனை எத்தனையோ….! அத்தனைக்கும் பீஸ்!
மனை முகூர்த்தம் -மாற்றுமத சடங்குகளைப் போல் ஃபாத்திஹா முலாம் பூசி அதற்கும் ஃபீஸ்!
இப்படியே பட்டியல் நீண்டு செல்லும். சேம்பிலுக்கு சிலவைகள் மட்டும் மேலேச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் முஸ்லிம் பொதுமக்களின் அறியாமையே! முஸ்லிம் பொதுமக்களின் அறியாமைத்தான் -ஆலிம்களின் மிகப் பெரிய மூலதனம்! அது மட்டுமல்ல, மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூதாதையர்கள் வழக்கங்களிலும் முஸ்லிம் பொதுமக்களுக்கிருக்கும் குருட்டு பக்தியுங்கூட.
ஓ! என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! இப்போது சிந்தியுங்கள். ஒருசில ரூபாய்களுக்கு வாங்கும் மட்பாண்டம் விஷயத்தில் கூட ஏமாறக் கூடாது என்று அவைகளைக் கொட்டிப் பார்த்துத் தட்டிப் பார்த்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாங்கும் நீங்கள் -மார்க்க விஷயத்தில் மட்டும் நீங்கள் கோட்டை விட்டு விடுகிறீர்கள். எளிதில் ஏமாந்து விடுகிறீர்கள். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முஸ்லிம் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மார்க்க ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுபவைகள் அனைத்தும் (என்று கூறாவிட்டாலும் மிகப்பெரும் பான்மையானவைகள்) சடங்கு சம்பிரதாயங்களே! சடங்கு சம்பிரதாயங்கள், மூட வழக்கங்கள் அனைத்தும் ஆலிம்களின் அங்கீகாரத்துடன் ஆலிம்களாலேயே அரங்கேற்றப்படுகிறது.
மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான – இறைவனுக்கு இணையா(ஷிர்க்கா)கும். குற்றத்திற்க்கிட்டுச் செல்லக் கூடிய இறை நிராகரி(குப்ர்)ப்பிற்க்கிட்டுச் செல்லக்கூடிய இறைமார்க்கம் இஸ்லாத்தின் அடித்தளங்களையே (குர்ஆன் – ஹதீது) தகர்த்தெறியக் கூடிய அனாச்சாரங்கள், மற்றும் மாற்று மதத்தவரின் சடங்கு சம்பிரதாயங்கள் சிற்சில மாறுதல்களுடன் மாற்றப்பட்ட நிலையில் மார்க்கமாய் மதிக்கப்படுகிறது.
சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் வயிறு வளர்ப்பவர்கள் ஆலிம்களாயிருந்தாலும் சரி, ஆலிம்களல்லாதவர்களாயிருந்தாலும் சரி, எல்லோரையும் குறிப்பாக புரோகிதத்தைத் தொழிலாய்க் கொண்டவர்களை மேற்காணும் இறைவாக்கு எச்சரிக்கிறது. இந்தப் புரோகிதத்துக்கு உறுதுணையாக இருக்கும் முஸ்லிம் பொதுமக்களே! சிந்தியுங்கள். முஸ்லிம் பொதுமக்களின் அனுசரனையே புரோகிதம் நின்று நிலைக்கக் காரணமாகிவிட்டது.
“மார்க்க முரணானவைகள் நடக்கக் காண்போர் இயன்றால் கரத்தால் தடுக்கட்டும். இல்லையென்றால் வாய்மொழியால் கண்டித்துத் திருத்தட்டும். அதுவும் முடியாதோர் மனத்தால் வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடை நிலை”. முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ)
சடங்கு சம்பிரதாயங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், அனாச்சாரங்களுக்கும் இஸ்லாத்தில் இம்மியும் இடமில்லை; இஸ்லாமிய அங்கீகாரமுமில்லை. இருப்பினும் இன்றளவும் இவைகள் சமூக நியதியாகிவிட்டன. இதன் மூலம் இறைமார்க்கம் அனுமதித்தவைகள் விலக்கப்பட்டும், விலக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு உறுதுணையாயிருப்பவர்கள் ஆலிம்கள்!
* “அவர்கள் தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் மஸீஹிப்னு மர்யத்தையும் அல்லாஹ்வை விட்டு (விட்டு) தங்கள் ரப்புகளாக ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அவனின்றி வேறு இறைவனில்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்”. (9:31)
இந்த இறைவாக்கு இறங்கியபோது கிருஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய அதி இப்னு ஹாத்தம்(ரழி) என்ற நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே! (ரப்புகளாக்கி விட்டதாக இறைவன் கூறுகின்றானே…!) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியதை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியதை ஹராம் என்றும் (ஆதாரம் இன்னதென்று ஆய்ந்தறியாமல் – கண்மூடித்தனமாய்) நீங்களும் நம்பினீர்கள். இல்லையா! (ஆம்) அது தான் அவர்களை ரப்புகளாக ஆக்கியது” என்று விளக்கம் தந்தார்கள். (அஹ்மத், திர்மிதீ)
முன்னுள்ள சமுதாயத்தவர்கள் செய்த தவறுகள் இந்தச் சமுதாயத்தவராலும் தொடரக் கூடாதென்கிற எச்சரிக்கையே மேற்காணும் இறைவாக்க. அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அளித்த விளக்கம்: மார்க்கம் இவ்வளவு தெளிவாக எச்சரித்தப் பின்னரும் ஆலிம்களின் புரோகிதத்துக்கும், முஸ்லிம் பொதுமக்கள் இயன்றளவும் உறுதுணையாயிருப்பது வேதனைக்குறியதல்லவா?
என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! நன்றாக, அழகாக, ஒருமுறைக்குப் பன்முறை சிந்தியுங்கள் சிந்தியுங்கள்! புரோகிதம், புரோகிதர்கள் இவ்விரண்டில் கெடுதிகளை விட்டும் மீட்சிப்பெற முன்வாருங்கள். அப்போதுத் தான் இஸ்லாம் நிலைநாட்டிய பிரிவுகளற்ற ஆலிம் அவாம் என்ற பேதமில்லாத, சமதர்ம, சமத்துவ, சகோரத்துவ, வாஞ்சை மிக்க சமுதாயத்தை நிறுவ முடியும்.
மார்க்கம் காட்டித் தந்துள்ள செயல்கள் அனைத்தும் சாதாரணச் சாமான்யரும் செய்வதற்கேதுவாய் மிகவும் எளிதாகவே இருக்கிறது. அவைகளை செய்ய வேண்டிய முறைகளை அறியாமலிருப்பதால் முஸ்லிம் பொதுமக்களுக்கு அவை பளூவாகத் தெரிகின்றன. முஸ்லிம் பொதுமக்கள் அனைவரும் அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வின் பெயரால் இம்மை மறுமையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றையே குறிக்கோளாக்கி, மார்க்க ரீதியில் செய்ய வேண்டிய வகைகளை அறிந்துக் கொண்டால் புரோகிதர்களும், புரோகிதமும் முற்றாய் ஒழித்துவிடும். அப்போது முஸ்லிம் பொது மக்கள் மார்க்கம் கட்டளையிடும் செயல்கள் எளிமையாக இருப்பதை எளிதில் உணர்வர்.
கூலிக்கு ஆள் பிடித்துத்தான் புரோகிதர்களைக் கொண்டு மட்டுமே செய்ய வேண்டிய அனைத்தும் மூடச்சடங்கு சம்பிரதாயங்களும், அனாச்சாரங்களுமேயாகும். அவைகள் மார்க்கத்திற்கு முரணானவைகள், அவைகளால் வயிறு வளர்ப்போர் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுமாறு முஸ்லிம் பொதுமக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

4/24/2015

எனர்ஜிக்கு என்ன செய்யலாம்?


நாள் முழுவதும் எனர்ஜியுடன் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் டாக்டர்? ஐயம் தீர்க்கிறார் வாழ்வியல் மேலாண்மை மற்றும் ஆன்டிஏஜிங் நிபுணர் கவுசல்யா நாதன்.
‘‘காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள கழிவுகள் சரியான முறையில் வெளியேறும். 30 நிமிட உடற்பயிற்சிகளை காலையில் செய்வது அவசியம். காலை உணவாக புரதம், நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஓட்ஸ், ராகி கஞ்சி, முளை கட்டிய பச்சைப் பயறு, சுண்டல், இட்லி, தோசை போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
மந்தமான உணர்வை ஏற்படுத்தும். காலையிலேயே அஜீரணத்தை ஏற்படுத்தி உங்களின் சுறுசுறுப்பான நாளை வீணாக்கிவிடும். பத்து மணிக்கு மேல் ஒரு கப் தயிரில் பழங்களை வெட்டிப்போட்டு ஐஸ்க்ரீம் போல சாப்பிடலாம் அல்லது ஒரு மில்க்ஷேக் அருந்தலாம். தயிரில் கால்சியமும், உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களும் இருப்பதால் உணவு செரிமானத்தை மேம்படுத்தும்.
மதியம் இரண்டு மணிக்குள் சமச்சீரான உணவுகளை மதிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதத்துக்கு இணையாக காய்கறி கூட்டு, பொரியல், அவியல் எடுத்துக்கொள்வது அவசியம். அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் அவித்த சிக்கன் அல்லது மட்டன் கறி இரு துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். மாலை நான்கு மணி அளவில் பாப்கார்ன், பொரி, அவித்த சுண்டல், ஸ்வீட்கார்ன் சூப், பழச்சாறு போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம். காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அருந்தக் கூடாது.
இரவில் எளிமையான உணவுகளான கோதுமை தோசை, அடை அவியல், இட்லி, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றை உண்ணலாம். இரவில் பொரித்த உணவுகளான புரோட்டா, சிக்கன் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இயற்கையான பழச்சாறுகளை மட்டுமே அருந்தவேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், துரித உணவுகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். குறைந்தது எட்டு மணி நேர தூக்கம் உடலுக்கு அவசியமானது. நேரம் தவறி சாப்பிடக் கூடாது. சுருக்கமாக சொன்னால் முறையான உணவும், போதுமான தூக்கமும், தேவையான அளவு உடற்பயிற்சியும் இருந்தால் எல்லா நாளும் சுறுசுறுப்பாக இயங்கும் இனிய நாளாக மாறிவிடும்...’’

3/28/2015








இஸ்லாமிய வினாடி வினா?


1)குர் ஆனில் இடி என்ற பெயரில் துவங்கும் அத்தியாயம் எது?
2)குர் ஆனில் கவிஞர்கள் என்ற பெயரில் துவங்கும் அத்தியாயம் எது?
3)குர் ஆனில் பொன் அலங்காரம் என்ற பெயரில் துவங்கும் அத்தியாயம் எது?
4)அன்டை நாட்டு ராணியின் சிம்மாசனத்தை கொண்டு வந்து விடுகிறேன் என்று சொன்ன ஜின்னின் பெயர் என்ன?
5)பின் சுன்னத் இல்லாத தொழுகைகள் எது?
6)பாங்கு இகாமத் இல்லாத தொழுகைகள் எது?
7)ஸபா நாட்டு இளவரசி பல்கீஸ் ஆண்டை கோட்டை தற்போது எந்த நாட்டில் உள்ளது?

தினம் முன்று பேரீட்சை


தினம் முன்று பேரீட்சை உண்டுவர ரத்த அழுத்தம் அகன்று போகிறதாம்!
ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.
அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும்.

100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.

2/14/2015



“வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள். (உமர்(ரழி)நூல்:ரஜீன்)
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
அல்லாஹ் கூறுகிறான், செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல் குர்ஆன் 18:103,104)

2/08/2015



வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது (நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி),ஜாபிர்(ரழி) புகாரீ,நஸயீ, முஸ்லிம்)

1/17/2015




part -3


தங்களது உடலாலும், பொருளாலும் அறப்போர் புரிந்தோர் அவர்களுக்குப் பின் உள்ளவர்களைவிட சிறப்புக்குரியவர்கள் நம்பிக்கையாளர்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது, மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்று)க் கொண்டான். அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கி அவர்களுக்கு அண்மையிலான வெற்றியையும் அளித்தான். (அல்குர்ஆன் 48:18)
இன்னும், முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (நம்பிக்கை கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை நற்செயலில் பின்தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே, அவர்களை, அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அன்றியும், அவர்களுக்காக சொர்க்கங்களைச் சித்தப்படுத்தியிருக்கின்றனான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அதில் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள், இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9:100)
இந்த வசனங்களில் இஸ்லாத்திற்காக ஆரம்ப காலங்களில் தங்கள் உடலாலும் பொருளாலும் தியாகம் செய்தவர்கள் அவர்களுக்குப் பின்னால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை விட சிறப்புக்குரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இந்தச் சமுதாயத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் சிறந்தவர்கள், அபூபக்ர்(ரலி) அவர்கள் ஆவார். அபூபக்ர்(ரலி) அவர்களுக்குப்பின் சிறந்தவர் உமர்(ரலி) அவர்கள் ஆவார் என அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்னது அஹ்மது 792, 793, 794, 795, 796)
மதீனா வந்த பின்புதான், திண்ணைத் தோழர்கள் எனப் பெயர் வரலாயிற்று. பத்ருப் போரில் கலந்து கொண்டோரின் சிறப்புகளை நாம் அறிந்துள்ளோம். அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம்(ரலி), மிக்தாத் பின் அல்அஸ்வத்(ரலி) ஆகியோரையும், நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடத்திற்குச் செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகப் பல்லக்கில் ஒரு பெண் இருக்கிறாள், அவளிடம் ஒரு கடிதம் இருக்கும், அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியனுப்பினார்கள்.
அவ்வாறே நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்து சென்றன. (அந்த இடத்தை அடைந்தோம்) அங்கு அந்தப் பெண் இருந்தாள். நாங்கள் அவளிடம் ”அந்தக் கடிதத்தை வெளியே எடு” என்று சொன்னோம். அவள் ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று சொன்னாள். நாங்கள், ”நீயாகக் கடிதத்தை எடுத்துக் கொடுத்து)விடு; இல்லாவிட்டால் (சோதனைக்காக) உன் ஆடையை நீ அவிழ்க்க வேண்டியதிருக்கும்” என்று கூறினோம்.
உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையிலிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அந்தக் கடிதத்தை அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தோம். அதில், ஹாத்திப் பின் அபீபல்த் தஆ(ரலி) அவர்கள், மக்காவாசிகளான இணைவைப்பாளர்களுள் சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் (போர்) விவகாரம் குறித்து சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்தார். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ”ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார்கள்.
ஹாத்திப்(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள், நான் குறைஷியரைச் சார்ந்து வாழ்பவனாகவே இருந்து வந்தேன். (அதாவது குறைஷியரின் நட்புக் குலத்தாராகவே அவர் இருந்துவந்தார். குறைஷிக் குலத்தில் ஒருவராக இருக்கவில்லை என சுஃப்யான் பின் உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்) தங்களுடன் இருந்துவந்த முஹாஜிர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தாரைப் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர் பலர் இருந்தனர்.
எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் எவரும் இல்லாததால் (இணைவைப்பாளர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து, அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள) என் (பலவீனமான) உறவினரைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால்தான் இணைவைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இத்தகவல்களைத் தெரிவித்தேன்) நான் என் மார்க்கமான இஸ்லாத்தை விட்டு வேறு மதத்தை ஏற்பதற்காகவோ, இறைமறுப்பாலோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இப்படிச் செய்யவில்லை” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ”இவர் சொல்வது உண்மையே! என்றார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். உமக்கென்ன தெரியும்? பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களை நோக்கி, நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களை மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் கூறி விட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ் ”இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரைப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.” (60:1) எனும் வசனத்தை அருளினான். (நூல் : முஸ்லிம் 4907)
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டார். ”அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்” என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்; நீ தவறாகச் சொல்கிறாய் அவர் (நகரத்திற்குச்) செல்லமாட்டார். ஏனெனில், அவர் பத்ருப் போரிலும் ஹுதைபியாவிலும் கலந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். (நூல் : முஸ்லிம் 4908)
பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களுள் திண்ணைத் தோழர்களும் உண்டு. அவர்கள் அல்லாதோரும் உண்டு. சொர்க்கத்துக்கு நற்செய்தி கூறப்பட்டோரும் உண்டு. அவர்கள் அல்லாதோரும் உண்டு.
திண்ணைத் தோழர்கள் பற்றிய தவறான அபிப்பிராயங்களுள் மற்றொன்று, அவர்கள் தான் ஸுஃபிய்யாக்களுக்கு முன்னோடிகள் என்பதாகும். ஸுஃபிய்யாக்களுக்கு முன்னோடிகள் என்ற கருத்தும் சமுதாயத்தில் மக்களிடையே நிலவுகிறது. திண்ணைத் தோழர்களுக்கும் ஸுஃபிய்யாக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே வரலாறு கூறும் உண்மை. ஸுஃபி என்பது ஸஃபா எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அதாவது உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளல் என்பது இதன் பொருளாகும். ஸுஃபிய்யாக்கள் இரண்டாம் நூற்றாண்டில் தான் தோன்றினர். திண்ணைத் தோழர்களோ நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே உள்ளனர். திண்ணைத் தோழர்களைக் குறிக்கும்.
ஸுஃப்ஃபா எனும் சொல்லுக்கும் ஸுஃபி எனும் சொல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஸுஃப்ஃபா என்பது திண்ணை என்று பொருள். இதை அதனோடு சம்பந்தப்படுத்தும் எல்லா கருத்துகளும் தவறானவையும் பலவீனமானவையும் ஆகும். ஸுஃபிகள் இறை நினவுக்காகத் தனித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு ‘கல்வத்’ என்றும் கூறுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகையில் தங்கியிருந்ததையும் திண்ணைத் தோழர்கள் தனித்திருந்ததையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகையில் தனித்திருந்தது அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தி (‘வஹி’) இறங்குவதற்கான முன்னேற்பாடாகும். திண்ணைத் தோழர்கள் திண்ணையில் குழுமியிருந்தது அவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்திலாகும். நபி(ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வஹி இறங்கிய பின்பு ஹிரா குகைக்குச் சென்றதில்லை. நபித்துவம் பெற்ற பின்பு நபி(ஸல்) அவர்கள் ‘ஹிரா’ குகை அமைந்துள்ள ‘ஜபல் நூர்’ எனும் அந்த மலைப் பக்கமே சென்றதில்லை என வரலாறு கூறுகிறது. திண்ணைத் தோழர்கள் வசதி வாய்ப்பு பெற்றபின் அங்கிருந்து சென்று விட்டனர். திண்ணைத் தோழர்களுள் பிற்காலத்தில் ஆளுநர்களாக இருந்தவர்களும் உள்ளனர்.
நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற பின் மக்களோடு சேர்ந்து வாழ்ந்தனர். மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்தனர். மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள். இஸ்லாத்தைப் பரப்பவும் தற்காப்புப் போர்களை மேற்கொண்டனர். உலகின் பெரும் மன்னர்களுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு கடிதம் எழுதினார்கள். இவை அனைத்தும் ஸுஃபிய்யாக்களின் செயல்களுக்கு எதிரானதாகும். மக்களுடன் கலந்து நடவாமல் தனித்திருப்பதும், நல்லவற்றில் ஈடுபடுதல், திருமணம் போன்ற அனுமதிக்கப்பட்ட ஆசைகளை விட்டொழிப்பதும், இஸ்லாமிய நடை முறையன்று. ஆனால் ஸுஃபிகள் என்போர் இவற்றை கடைப்பிடிக்க வேண்டுமெனக் கூறுகின்றனர்.
அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு) ”முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ”(இனிமேல்) நான் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன்” என்றார். இன்னொருவர், ”நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ”நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, ”இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன். தொழுகவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மண முடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 5063, முஸ்லிம் 2714)

இது தான் நபி(ஸல்) அவர்கள் சுன்னத் வழிமுறையாகும். இதை விடுத்து ஸுஃபிகள் என்று கூறிக் கொண்டு துறவி போல் வாழ்தல் இஸ்லாத்திற்கு முரணானதாகும்.
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம். அவ்வாறே மர்யமின் குமாரர் ஈஸாவை (தூதராக அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம். அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம். ஆனால், அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவறத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டு பண்ணிக்கொண்டார்கள்) ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப்பேணவில்லை. அப்பால், அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலியை நாம் வழங்கினோம். எனினும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்5 7:27)
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டது போன்று எத்தனையோ துறவிகள் தமது துறவறத்தைச் சரியாகப் பேணாமல் திருமணமும் செய்யாமல், அந்நியப் பெண்களோடு சல்லாபித்து தமது துறவறத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளதை நாம் கேட்டும், படித்தும் இருக்கிறோம். துறவறம் மேற் கொள்வதாக நடித்து, அதைப் பேண முடியாமல் அவமானப்படுவதை விட துறவறம் பூணாமல் இருப்பதே சிறந்தது.
மனிதன் ஆசாபாசங்களுடன் தான் படைக்கப்பட்டுள்ளான். எனவே, அவனது ஆசைகளுக்கு அணை போடும் போது அது எல்லை மீறி பின்னர் வாய்ப்புக் கிடைக்கும் போது தவறு செய்யத் தூண்டிவிடுகிறது. அனுமதிக்கப்பட்ட உலக இன்பங்களில் மூழ்குவதுடன் அந்த இன்பங்களைக் கட்டுப்படுத்தி இறைவனை வணங்குவது தான் அதிக நற்கூலியைப் பெற்றுத்தரும் அறமாகும் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.
திண்ணைத் தோழர்கள் குறித்த மற்றொரு தவறான தகவல் நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்னரே திண்ணைத்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர் என்பதாகும். இதுவும் மாபெரும் தவறாகும். திண்ணைத் தோழர்கள் என்பது வரலாற்று ஆசிரியர்களாலும் ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படுதல் கிப்லா மாற்றம் ஏற்பட்ட பின்னரேயாகும். கிப்லா மாற்றம் நபி(ஸல்) அவர்களின் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்ற (ஹிஜ்ரத்துக்குப்) பின்பே ஏற்பட்டது. திண்ணைத் தோழர்கள் என்பது அதன் பின்பே வரலாற்று ஆசிரியர் களால் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறிருக்க அவர்கள் எப்படி நபி(ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றிருக்க முடியும்?
திண்ணைத் தோழர்கள் பற்றிய மற்றொரு தவறான தகவல் வருமாறு: நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் சென்றிருந்த போது அல்லாஹ் அவர்களுக்கு பல இரகசியங்களைக் கூறினான். அதை மனிதர்களில் யாரிடமும் கூறக் கூடாது என்றும் சொல்லி இருந்தான். இவ்வாறிருக்க நபி(ஸல்) அவர்கள் வானிலிருந்து பூமிக்கு வந்த பின், அல்லாஹ் நபி(ஸல்) அவர்களிடம் இரகசியமாகத் தெரிவித்திருந்தவற்றை திண்ணைத் தோழர்கள் தங்களுக்கிடையே பேசிக்கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நீ என்னிடம் கூறிய இரகசியத்தை நான் யாரிடமும் கூறவில்லையே. இவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டார்களாம். அதற்கு அல்லாஹ், அங்கே எனக்கும் உங்களுக்கும் இடையே அப்போது திண்ணைத் தோழர்கள் இருந்தார்கள்’ என்று கூறியதாக சிலர் தவறான தகவல் பரப்புகின்றனர். இது அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். இவ்வாறு நம்புபவர் நபி(ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே பொய் கூறிய குற்றத்திற்கு ஆளாகி நரகம் செல்வார்.
மிஃராஜ் நடந்தது மக்காவில், நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்வதற்கு முன்பு நடந்தது. திண்ணைத் தோழர்கள் என்ற பெயரே நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்பு தான் ஏற்பட்டது என்பதை மேலே குறிப் பிட்டுள்ளோம். இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் இந்த மேற்கண்ட தவறான தகவல்கள் குறித்து தமது ஃபதாவா இப்னு தைமிய்யா எனும் நூலில் விரிவாக எழுதியுள்ளார்கள்.
திண்ணைத் தோழர்கள் குறித்த மற்றொரு தவறான கண்ணோட்டம் வருமாறு: அவர்களுக்கு மக்களிடம் யாசிப்பது தவிர வேறு தொழில் ஏதும் கிடையாது என்று திண்ணைத் தோழர்கள் குறித்துக் கூறுகின்றனர் சிலர். ஆனால் இது தவறான செய்தியாகும். திருக்குர்ஆனையும் அவர்களுள் சிலரது வாழ்வையும், நபிமொழிகளையும் நன்கு புரிந்தோர் அவர்கள் குறித்து இவ்வாறு கூறமாட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: பூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு, அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக்கொள்கிறான். அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள். (இத்தகையோருக்காக) நல்லதிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான். (அல்குர்ஆன் 2:273)
இந்த வசனம், அல்லாஹ்வுக்காகவும், அவனது தூதருக்காகவும், தங்களது மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறிய முஹாஜிர் (மக்கா முஸ்லிம்)களைக் குறித்து அருளப்பட்டதாகும். இவர்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளைப் பெற்றிருக்கவில்லை. வாழ்வாதாரத் தேவைகளை ஈட்டுவதற்காகப் பயணம் மேற்கொள்ளவும் இயலாதவர்கள்.
அவர்கள் யாசிக்கும் தகுதி பெற்றிருந்தும் கூட தன்னடக்கத்தோடு நடந்து கொள்வார்கள். நடை, உடை, சொல், செயல்களால் செல்வந்தர்களைப் போன்று தன்னடக்கத்துடன் நடந்து கொள்வதால் அவர்களைக் காணுவோர் அவர்கள் பெரும் செல்வந்தர்கள் என எண்ணிவிடுவர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஒரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன், ஏழை யாரெனில் அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான், நீங்கள் விரும்பினால், ”அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்” எனும் (2:273வது) இறை வசனத்தை ஓதிக்கொள். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி 4539, முஸ்லிம் 1880.)
‘முஸைனா’ குடும்பத்தைச் சேர்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார்: என்தாய் என்னிடம், ”மக்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (உதவி) பெறுவது போன்று நீயும் அவர்களிடம் கேட்க வேண்டியது தானே” என்று கூறினார். அவ்வாறே நானும் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்கச் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (மக்களுக்கு) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அந்த சொற்பொழிவில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது: யார் (பிறரிடம் யாசிக்காமல்) தன்மானத்துடன் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானம் உள்ளவராகவே ஆக்குவான். யார் (பிறரிடம்) தேவையற்றவராக இருக்கிறாரோ அவரை அல்லாஹ் (பிறரிடம்) தேவையற்றவராகவே ஆக்குவான். ஐந்து ஊக்கியா அளவு உணவுப் பொருளைப் பெற்றவர் மக்களிடம் யாசித்தால் அவர் மக்களிடம் வற்புறுத்தி யாசித்தவர் போன்று ஆகி விடுகிறார்.
இதைக் கேட்ட நான் என் மனத்திற்குள், ஐந்து ஊக்கியா அளவை விட அதிக மதிப்புள்ள ஒட்டகம் ஒன்று நம்மிடம் உள்ளதே! நம் அடிமையிடமும் ஐந்து ஊக்கியா அளவு மதிப்பை விட அதிக மதிப்புள்ள ஒட்டகம் ஒன்று உள்ளதே! என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்காமலேயே திரும்பி விட்டேன். (நூல் : முஸ்னது அஹ்மத் 16601) (ஓர் ஊக்கியா என்பது இன்றைய 126.8 கிராம் மதிப்புள்ள வெள்ளியாகும். 5 ஊக்கியா 634 கிராம் வெள்ளி)

part 2


பசியின் கொடுமை காரணமாகவும், கடினமாக ஏழ்மை காரணமாகவும் அவர்கள் அனுபவித்த துன்பத்தையும் அதில் பொறுமையாக இருந்தது குறித்தும் அவர்களே அறிவிப்பதாவது:
அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள் (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.
பிறகு அபுல்காசிம் (நபி(ஸல்)) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். (என்னைப்) பின்தொடர்ந்து வா! என்று சொல்லி விட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் மனைவியாரிடம்) இந்தப் பால் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார்கள். அவர்கள் இன்ன ஆண் அல்லது பெண் தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுர்! என அழைத்தார்கள். நான் இதோ வந்துவிட்டேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள் என்றார்கள்.
திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. (இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணை வாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்து விட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஹிர் என! அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே! என்றேன். நபி(ஸல்) அவர்கள் இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள் என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு அபூ ஹிர்! என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன் கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே! என்று சொன்னேன். அதற்கவர்கள் நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே) என்று கேட்டார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான் என்றேன். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து (இதைப் பருகுங்கள் என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். இன்னும் பருகுங்கள் என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் பருகுங்கள் என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன். இறுதியில் சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை என்றேன். நபி(ஸல்) அவர்கள் (சரி) அதை எனக்குக் கொடுங்கள் என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள். (நூல் : புகாரி 6452)

அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். (அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), அபூ ஹுரைரா! என்று அழைத்தார்கள். நான், இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே கட்டளையிடுங்கள் என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனக்கேற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக் கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்! என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு மீண்டும் (அருந்துங்கள்) என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாகிவிட்டது.
பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். (என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத் துவிட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும் படி உங்களிடம் கேட்டேன் என்று சொன்னேன். உமர்(ரலி), அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும் என்று கூறினார்கள். (நூல் : புகாரி 5375)
அல்வலீத் பின் அப்தில் மலிக் என்பவர் காலம் வரை திண்ணைத் தோழர்கள் வசித்த அந்தத் திண்ணை அப்படியே இருந்தது. மதீனா பள்ளியை விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக இவர் அதை மாற்றியமைத்து விட்டார். அது தற்போது ‘தக்கத்துல் அக்வாத்’ என அழைக்கப்படுகிறது.
1) பிலால் பின் ரபாஹ்(ரலி) 2) அப் பராச பின் மாலிக்(ரலி) 3) ஸகீஃப் பின் உமர்(ரலி) 4) கயில் பின் சுராக்கா(ரலி) 5) ஹாரிஸா பின் நுஉமான்(ரலி) 6) ஹாஸிம் பின் ஹர்மலா(ரலி) 7) ஹன்ழலா பின் ஆமிர்(ரலி) 8) ஹகம் பின் உமைர்(ரலி) 9) கப்பான் பின் அரத்(ரலி) 10) குனைஸ் பின் ஹீதாஃபா(ரலி) 11) குரைம் பின் ஃபாதிக்(ரலி) 12) அபூ ரஸீன்(ரலி) 13) ஸாலிம் பின் உமைர்(ரலி) 14) இப்பாள் பின் ஸாரியா(ரலி) 15) துக்ஃபாபின் ஸாரியா(ரலி) 16) தல்ஹா பின் அம்ர்(ரலி) 17) தஃபாவி அத் தவ்ஸீ(ரலி) 18) அபூ தர் அல் கிஃபாரீ(ரலி) 19) அபூ ஹுரைரா(ரலி) 20) அப்துல்லாஹ் பின் உம்மி பக்தூம் 21) அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) 22) அப்துல்லாஹ் பின் ஸைத் அல் ஜீஹீனி(ரலி) 23) அப்துல்லாஹ் பின் அல் ஹாரிஸ்(ரலி) 24) அப்பாத் பின் காலித் அல் கிஃபாரீ(ரலி) 25) புளாலா பின் உஸைத் அல் அஸ்ஸாரீ(ரலி) 26) மிஸ்தஹ் பின் அஸாஸா(ரலி) 27) வாபிஸா பின் மஅத் அல் ஜீஹீனி(ரலி) 28) முகீஃராவின் முன்னாள் அடிமையான ஹிலால்(ரலி) இவர்கள் திண்ணைத் தோழர்கள் ஆவார்கள்.
திண்ணைத் தோழர்களுள் எழுபது நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுள் எவருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களுள் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது, (வேறு சிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத்தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும் போது) சிலரது போர்வை கரண்டைக்கால் வரையும் இருக்கும். வேறு சிலரது போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும், தமது மறைவிடங்களைப் பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காகத் தம் கைகளால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) நூல் : புகாரி 442
திண்ணைத் தோழர்கள் யார் யார் என்பதையும் அவர்கள் தொடர்பான செய்திகளும் பல நூல்களில் பல்வேறிடங்களில் பரவிக்கிடக்கின்றன. அந்த அறிவிப்புகள் அனைத்தையும் எழுதினால் அது பெரிய நூலாக ஆகிவிடும். எனவே, அவர்கள் குறித்த சில அவசியமான விஷயங்களை மட்டும் இங்கே கூற விரும்புகிறேன்.
பின்வரும் ஹதீஸ் முஸ்னது அஹ்மது எனும் நூலில் பதிவாகியுள்ளது. நபி(ஸல்) அவர்கள் திண்ணைத் தோழர்கள் மீது எவ்வளவு அக்கரை கொண்டிருந்தார்கள் என்பதை அது விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா(ரலி) அவர்களைத் திருமணம் செய்து கொடுத்த போது, அவர்களுக்குக் கம்பளிப் போர்வை, இலைகள் திணிக்கப்பட்ட தோல் தலையணை, இரண்டு திரிகைகள், தோலினாலான தண்ணீர்ப்பை, இரண்டு கூஜாக்கள் ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள்.
ஒரு நாள் அலீ(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! (பேரீத்தம் மரத்திற்குத்) தண்ணீர் இறைத்ததால், என் நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளது. அல்லாஹ் உன் தந்தைக்குப் போர்க்கைதிகள் சிலரைத் தந்துள்ளான். எனவே நீ சென்று அவர்களிடம் ஒரு உதவியாளரைக் கேள் என்றார்கள். உடனே ஃபாத்திமா(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் கைகள் காய்த்துப் போகும் அளவுக்கு நானும் மாவு திரிக்கிறேன்” என்று கூறினார்கள். எனவே ஃபாத்திமா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ”மகளே! நீ இங்கு வரக் காரணம் என்ன?” என்று (நபியவர்கள்) கேட்டார்கள். ”உங்களுக்கு ‘ஸலாம்’ கூற வந்தேன்” என்று ஃபாத்திமா(ரலி) அவர்கள் கூறினார்கள். (தாம் விரும்பியதை) அவர்களிடம் கேட்க, வெட்கப்பட்டுத் திரும்பிவிட்டார்கள்.
”என்ன செய்தாய்?” என அலீ(ரலி) அவர்கள் (ஃபாத்திமாவிடம்) கேட்டார்கள். ”அவர்களிடம் நான் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன்” என ஃபாத்திமா(ரலி) கூறினார்கள். (அலீயவர்கள் கூறுகின்றார்கள்: இருவரும்) சேர்ந்து அவர்களிடம் சென்றோம்.
அப்போது அலீ(ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நெஞ்சு வலிக்கும் அளவுக்கு (பேரீத்த மரத்திற்குத்) தண்ணீர் இறைக்கின்றேன்” என்றார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்கள், ”என் கைகள் காய்த்துப் போகும் அளவுக்கு நான் மாவு அறைக்கின்றேன். உங்களிடம் போர்க் கைதிகளையும் வசதிகளையும் அல்லாஹ் தந்துள்ளான். எனவே எங்களுக்குப் பணியாள் (ஒருவரை) வழங்குங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் இருவருக்கும் நான் தரமாட்டேன். திண்ணைத் தோழர்களுக்குச் செலவு செய்ய எதுவும் கிடைக்காமல், நான் அவர்களை வயிற்றுப் பசியோடு (குப்புறப்படுக்க) விட்டுள்ளேன். எனவே, நான் கைதிகளை விற்று, அதன்மூலம் கிடைக்கும் தொகையைத் திண்ணைத் தோழர்களுக்கே செலவு செய்வேன்’ ‘என்று கூறினார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் திரும்பிவிட்டார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள், அவ்விருவரும் (உறங்குவதற்காக) தம் போர்வையைப் போர்த்திய நேரத்தில் வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போர்வையால் இருவரும் தங்களின் தலைகளை மூடினால், இருவரின் பாதங்களும் வெளிப்படும், பாதங்களை மூடினால், இருவரின் தலைகளும் திறந்து கொள்ளும் அப்போது, இருவரும் அப்படியே இருங்கள்” என்று கூறிவிட்டு, ”என்னிடம் நீங்கள் இருவரும் கேட்டு வந்ததைவிடச் சிறந்ததை உங்களுக்கு நான் கூறட்டுமா?” என்று கேட்டார்கள். ”சரி” என இருவரும் கூறினார்கள்.
ஆகவே, அவர்கள், ”சில சொற்கள் உள்ளன. அவற்றை எனக்கு ஜிப்ரீல்(அலை) கற்றுத் தந்தார்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பத்து தடவை ‘சுப்ஹானல்லாஹ்’ கூறுங்கள், பத்து தடவை ‘அல்ஹம்து லில்லாஹ்’ கூறுங்கள், பத்து தடவை ‘அல்லாஹு அக்பர்’ கூறுங்கள். உங்களின் படுக்கைக்கு நீங்கள் வந்து விட்டால், 33 தடவை ‘சுப்ஹானல்லாஹ்’ கூறுங்கள். 33 தடவை ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறுங்கள். 34 தடவை ‘அல்லாஹு அக்பர்’ கூறுங்கள்” என்று கூறினார்கள்.
”அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவற்றை எனக்குக் கற்றுத் தந்த நாளிலிருந்து அவற்றை நான் விட்டதே இல்லை” என்று அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் இப்னுல் கவ்வாஉ என்பவர், ”ஸிஃப்பீன் போரின் இரவு நேரத்தில் கூட விட்டதில்லையா?” என்று கேட்டார். ”இராக்வாசிகளே! அல்லாஹ் உங்களை நாசமாக்குவானாக! ஆமாம். ஸிஃப்பீன் போரின் இரவிலும் கூட நான் (அவற்றை ஓத) விட்டதில்லை” என அலீ(ரலி) அவர்கள் பதில் கூறினார்கள். அறிவிப்பாளர் : அதாஉ பின் ஸாஇப்(ரஹ்) நூல் : முஸ்னது அஹ்மது 562, 797
மக்களிடம் திண்ணைத் தோழர்கள் குறித்துள்ள தவறான சிந்தனைகளை களைவது முக்கியமாகும். அவர்கள் குறித்த தவறான எண்ணங்களுள் ஒன்று அவர்கள் நாற்பெரும் கலீஃபாக்களான அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ(ரலி) ஆகியோரை விட சிறப்புக்குரியவர்கள். நபி(ஸல்) அவர்களால் சொர்க்கவாசிகள் என நற்செய்தி கூறப்பட்ட (தல்ஹா, ஸுபைர், ஸஅது, அப்துர் ரஹ்மான் பின் அஉஃப், அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ், ஸயீத் பின் ஸைத்) ஆகிய பதின்மரை விடவும், ஏன்! மற்றெல்லா நபித்தோழர்களை விடவும் அவர்கள் சிறப்புக்குரியவர்கள் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
அல்லாஹ் கூறுகின்றான்: அன்றியும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர உரிமை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களிலிருந்து எவரும் சமமாக மாட்டார்கள். (மக்காவின் வெற்றிக் குப்)பின் செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும், அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கிறன்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் 57:10

திண்ணைத் தோழர்கள்! - 1


திண்ணைத் தோழர்கள் என்போர் நபி(ஸல்) அவர்களின் ஏழைத் தோழர்கள் ஆவர். இவர்களுக்கு குடும்பம், வீடு, செல்வம் ஏதும் இருக்கவில்லை. மஸ்ஜிதுன் நபவியை ஒட்டிய ஒரிடத்தில் இவர்கள் தங்கி வந்தனர். ஆதரவற்றவர்கள் தங்குவதற்காகவே இந்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தையே ஸுஃப்பா (திண்ணை) என்பர். இவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது கூடும்; குறையும். இவர்களில் திருமணம் செய்து கொண்டவர், இறந்து போனவர், பயணம் சென்றவர் ஆகியோரால் அவ்வப்போது இவர்களின் எண்ணிக்கை குறைவதுண்டு.
நூற்றுக்கும் அதிகமானோர் இவ்வாறு இருந்து வந்ததாக அபூநுஐம்(ரஹ்) அவர்கள் ஹுல்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவரான அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், திண்ணைத் தோழர்களை இஸ்லாத்தின் விருந்தாளிகள் என்று கூறுவார்கள். (காண்க புகாரி ஹதீஸ் எண்.6452) தொழுகைக்கு வருவோரிடம் சொல்லி இவர்களை உணவுக்காக அழைத்துச் செல்லும் படி நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். தாமும் அழைத்துச் செல்வார்கள்.

தர்மப்பொருள்கள் ஏதேனும் வந்தால், அதனை நபி(ஸல்) அவர்கள் சாப்பிடாமல், திண்ணைத் தோழர்களுக்கு அனுப்பி விடுவார்கள். அன்பளிப்பு ஏதேனும் வந்தால், அதைத் திண்ணைத் தோழர்களுடன் சேர்ந்து தாமும் சாப்பிடுவார்கள். (ஃபத்ஹுல் பாரீ)
இந்நாளில் இது ‘தக்கத்துல் அக்வாத்’ என அறியப்படுகிறது. மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த திருமணம் செய்யாத, வசதியற்ற, குடும்பமோ, வீடு வாசல்களோ இல்லாத ஏழைகள் இங்கே தங்கியிருந்தார்கள். இவர்களின் எண்ணிக்கை சிலவேளை அதிகரிக்கும், சிலவேளை குறையும். சில வரலாற்று நூற்களில் 70 முதல் 100, என்றும் 300 மேற்பட்டோர் என்று எழுதப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் தமது பெரும்பாலான நேரங்களில் இவர்களுடன் அமர்ந்திருப்பது வழக்கம். அவர்களோடு அளவளாவுவார்கள். உணவு வீட்டிலிருந்தால் இவர்களை அழைத்து உணவு வழங்குவார்கள். நபித்தோழர்கள் இவர்களுள் ஒரிருவரை தம்மோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவருந்தச் செய்வது உண்டு. பேரீச்சங் குலைகளைக் கொண்டு வந்து இவர்கள் வசிக்கும் திண்ணையில் இவர்களுக்காக சிலர் தொங்கவிடுவதும் உண்டு.
இதைக் கண்ட நயவஞ்சகர்கள் பெருமைக்காக, முகஸ்துதிக்காக தாழ்ந்த வகைப் பேரீச்சங் குலைகளைக் கொண்டு வந்து அதுபோன்று தொங்கவிடுவது உண்டு. இவர்கள் குறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான்
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் 2:268)
திண்ணைத் தோழர்களின் நிலை குறித்து இறைவன் பின்வருமாறு கூறுகிறான்: பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 2:273)
இவர்களின் முக்கிய பணி நபி(ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் கற்றுக்கொள்வது, மார்க்கச் சட்டங்களைக் கற்றுக் கொள்வதே ஆகும். அல்லது நபி (ஸல்) அவர்கள் யாரிடம் கற்றுக் கொள்ளும்படி கூறுகிறார்களோ அவர்களிடம் கற்றுக் கொள்வதாகும். போர் வந்து விட்டால், இவர்களுள் சக்தி பெற்றவர்கள் போருக்காகப் புறப்படுவார்கள். இவர்களுள் முக்கியமானவர் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ஆவார்கள்.
இவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நபிமொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். அது குறித்து அவர்களே அறிவிக்கிறார்கள்:
அபூ ஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு ஏழை மனிதன். நான் என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து வந்தேன். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன் என்று அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, நாம் நேர்வழியையும் தெளிவான சான்றுகளையும் அருளி மக்களுக்காக அவற்றை வேதத்தில் நாம் தெளிவாகக் கூறிய பின்னரும் யார் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் தன் அருளுக்கு அருகதையற்றவர்களாக்கி விடுகிறான். மேலும் (தீயோரை) சபிப்ப (வர்களான இறைநம்பிக்கையாளர்களும் வான)வர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ஆயினும் அவர்களில் யார் (தம் குற்றங்களிலிருந்து) மீண்டு, மேலும் (தம்மைச்) சீர் திருத்தி இன்னும் (தாம் மறைத்தவற்றை மக்களுக்குத்) தெளிவுபடுத்தியும் விடுகின்றனரோ அவர்களைத் தவிர. (அவ்வாறு தம்மைத் திருத்திய) அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் மிக்க மன்னிப்பவனும் அருளுவதில் அள வற்றவனுமாவேன் (திருக்குர்ஆன் 02:159-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.
மேலும் தொடர்ந்து மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.
இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு உம்முடைய மேலங்கியை விரியும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக! என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (நூல்கள் : புகாரி 118, 119, முஸ்லிம் : 4905, 4906)

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...